மும்பை: 40 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருக்கும் காளிதாஸ்; கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பாரா?

மும்பை வடாலா தொகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக இருப்பவர் காளிதாஸ் கோலம்பர். இப்போது 9வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த 40 ஆண்டு எம்.எல்.ஏ.பதவியை காளிதாஸ் ஒரே கட்சியிலிருந்து கொண்டு வெற்றி பெறவில்லை.

ஆரம்பத்தில் சிவசேனாவில் இருந்த காளிதாஸ் பின்னர் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார். அதன்பிறகு இப்போது பா.ஜ.கவிற்குத் தாவி இருக்கிறார். 40 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் இதுவரை ஒரு முறை கூட அமைச்சராகவில்லை. ஆனாலும் மக்கள் அவரைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்த முறையாவது அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையில் பா.ஜ.கவிற்கு 20 அமைச்சர் பதவி வரை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்குக் கட்சிக்குள் கடுமையான போட்டி இருக்கிறது. அதனால் காளிதாசிற்குக் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காளிதாஸ்

அதேசமயம் 9வது முறையாக எம்.எல்.ஏ.வாகி இருக்கும் காளிதாஸ் கோலம்பர் இம்முறை கின்னஸ் சாதனையில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கின்னஸ் சாதனை புத்தக அதிகாரிகள் இன்று (டிசம்பர் 1) காளிதாஸ் கோலம்பரின் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் காளிதாஸ் சாதனைகள் குறித்து விசாரித்துவிட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவரது பெயரைச் சேர்ப்பது குறித்து முடிவு செய்வார்கள்.

இது குறித்து காளிதாஸ் கோலம்பரிடம் பேசியபோது,’ ‘நான் 6வது வகுப்பு படிக்கும்போது மும்பைக்கு வந்தேன். ஒரு முறை பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும்போது பால்தாக்கரேயின் பேச்சைக் கேட்க நேரிட்டது. அதில் கவரப்பட்டு சிவசேனாவிற்காகப் பாடுபட ஆரம்பித்தேன். 1990ம் ஆண்டு சகன் புஜ்பால் என்னை எம்.எல்.ஏ.பதவிக்குப் பரிந்துரைத்தார். உடனே என்னை பால்தாக்கரே மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்தார். அவர் என்னிடம் உன்னை எம்.எல்.ஏ.வாக்கப்போகிறேன் என்று கூறினார்.

சில காலம் நான் எம்.எல்.ஏ.வாகவும், கவுன்சிலராகவும் ஒரே நேரத்தில் இரண்டு பதவியிலிருந்தேன்” என்றார்.

மில் தொழிலாளர்கள் பிரச்னைக்காகப் பாடுபடும் காளிதாஸ் கோலம்பர் மில்லில் வேலை செய்து வேலை இழந்தவர்களுக்கு அரசு வீடு கட்டிக்கொடுத்தபோது வீட்டின் விலை 50 லட்சமாக நிர்ணயித்தனர். அதனை எதிர்த்து காளிதாஸ் கோலம்பர் இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதனைத் தொடர்ந்து வீட்டின் விலையை அரசு 25 லட்சமாகக் குறைத்தது. அதன் பிறகு பா.ஜ.க கூட்டணி அரசு பதவியேற்றபோது, மேலும் 10 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டது. அதனால்தான் பா.ஜ.கவில் சேர்ந்ததாக காளிதாஸ் தெரிவித்தார்.

கொங்கன் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் தனது தொகுதியில் யாராவது உயிரிழந்தால் அவர்களது உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கிறார். அதோடு மக்களோடு வாழ்கிறார். இதனால் அவரை எதிர்த்து ஒரு முறை 10 பேர் போட்டியிட்டு அத்தனை பேரும் டெபாசிட் இழந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய எம்.எல்.ஏ.க்களை பதவிப்பிரமாணம் செய்து வைக்கத் தற்காலிக சபாநாயகராகவும் காளிதாஸ் கோலம்பர் பணியாற்றி இருக்கிறார்.

ரோஹித் பாட்டீல்

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் ரோஹித் பாட்டீல் மிகவும் இளம் வயது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் மகனான ரோஹித் பாட்டீல் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதோடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 78 பேர், முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/JailMathilThigil