பெண்டிங் வழக்குகள்: சிக்கிய `பவாரியா கேங்’… 22 ஆண்டுகளை கடந்த தாளமுத்து நடராஜன் கொலை வழக்கின் நிலை

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வழக்குகள், மாநில, தேசிய அளவில் கவனம் பெறும். நிதி மோசடி தொடங்கி பாலியல் கொடூரங்கள், கொலைகள், சாதிய கொடுமைகள் என பல விஷயங்களுக்கு நாமும் `உச்’ கொட்டி இருப்போம். `அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன?’ விவரிக்கிறது `பெண்டிங் வழக்குகள்’

தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்திருக்கும் அரசியல்வாதிகளின் வீடுகளை டார்கெட் செய்து கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தலை செய்துவிட்டு தப்பிச்செல்வது தான் ’பவோரியா கேங்’கின் ஸ்டைல். அப்படி, தமிழகத்தில் மட்டும் 24 சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர் என்கிற தகவல் காவல்துறையும், நீதித்துறையயுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அந்தவகையில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் ’பவோரியா கேங்’ மூலம் அரங்கேறிய சேலம் கொள்ளை சம்பவம் ஒன்றில் சேலம் நீதிமன்றம் விரைவில் ’க்ளைமேக்ஸ்’ சீனை கொண்டுவரும் தருவாயில் இருந்து வருகிறது.

சேலம் மாநகர், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன். இவரது வீடு சேலம் டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 12.09.2002 ஆம் ஆண்டு நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியுடன் அவரது வீட்டுக்குள் நுழைந்து தாளமுத்து நடராஜனையும், அவரது வீட்டு காவலாளியையும் கொலை செய்துவிட்டு அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றது.

அன்று இரவு காவலாளியை தாக்கி விட்டு, வீட்டில் இருந்து 250 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தாளமுத்து நடராஜன் இருந்த அறையின் கதவை தட்டியபோது, துப்பாக்கியுடன் வெளியே வந்த தாளமுத்து நடராஜனையும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது. பின்னர் டபுள் பேரல் துப்பாக்கி, கை துப்பாக்கி, நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வெளியே வந்தது. அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த கும்பல் தப்பியது. 

இதுகுறித்து விசாரணை செய்த அன்னதானப்பட்டி போலீஸார் நீண்ட நாட்களுக்கு பின் இது ’பவாரியா கேங்’ செய்த சம்பவம் என கண்டுப்பிடித்து குற்றவாளிகள் 18 பேர் மீது வழக்குப்பதிந்து சிலரை கைது செய்தனர்.

இதுகுறித்து பேசும் தனிப்படை போலீஸார் சிலர், “கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் நடிப்பில் தமிழில் வெளியான  ’தீரன் அதிகாரம்’ என்கிற படத்தின் மூலம் வெளியுலகத்திற்கு பிரபலமாக தெரியவந்தவர்கள் தான் இந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ’பவாரியா கேங்’. தமிழக காவல்துறை இந்த கும்பலை எத்தனை சிரமத்திற்கு மத்தியில் பிடிக்க முடிந்தது என்பதை இந்த படம் எடுத்துக்காட்டியது. அப்படி திரைப்படம் அளவிற்கு பேசப்பட்டவர்கள் தான் இந்த பவோரியா கேங்.

இவர்களுடைய பெரும்பாலான கொள்ளைச் சம்பவங்கள் தமிழகத்தை நோக்கி இருந்ததற்கான காரணம், இங்குள்ள பெண்கள் அதிக அளவில் நகைகள் அணிகின்றனர். செல்வந்தர்களாக இருக்கின்றனர் என்று எண்ணிதான் தமிழகத்தை நோக்கி இந்த கேங் வந்தது. அதுவும் இவர்களது பயணம் என்பது ரயிலோ, விமானமோ அல்ல முற்றிலும் தரைவழி பயணத்தை மேற்க்கொண்டு வருவார்கள். இவர்கள் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தும் வாகனம் என்று பார்த்தால், கண்டெய்னர் லாரி தான். காரணம், போலீஸ் பார்வை பெரும்பாலும் இதில் இருக்காது என்பது ஒன்று. மற்றொன்று இதில் சென்றால் எந்த இடத்திலும் தங்களது முகம் பதிவாகாது என்பதும் தான்.

அதன்மூலம் ஒரு கண்டெய்னர் லாரியை எடுத்துக்கொண்டு அதற்குள், 10-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்து வருவார்கள்.  கண்டெய்னர்க்குள்ளேயே சமைத்துக்கொள்வது, தூங்கிக்கொள்வது மட்டுமல்லாமல் அவர்களுக்கு தேவையான ஆயுதங்களையும் அதில் எடுத்துக்கொண்டு பயணித்து வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவார்கள்.” என்றனர்.

கன்டெய்னர் லாரி

நம்மிடம் பேசிய மேற்கு மண்டல காவல்துறை முன்னாள் அதிகாரிகள் சிலர், “சேலத்தில் காங்கிரஸ் கட்சி மாநகர, மாவட்ட தலைவர் தாளமுத்து நடராஜன் கொலைக்கு பிறகு கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், திமுக- வைச் சேர்ந்த கசேந்திரன் என அடுத்தடுத்து பிரமுகர்கள் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டனர். இதனால் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அப்போதைய காவல்துறை இயக்குனராக இருந்த ஜாங்கிட் தலைமையில் குழு அமைத்தார். அப்படி அந்தக்குழு தேடுதல் வேட்டையை ஆரம்பித்தபோது கிடைத்த ஒரே ஒரு எவிடன்ஸ் என்பது சம்பவ இடத்தில் கிடைத்த ஒரே ஒரு விரல் ரேகை மட்டும் தான்.

அதுவும் அந்த விரல் ரேகை என்பது கருணாகப்பாம்பு வடிவிலான விரல் ரேகை. இது வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தான் இதுபோன்று இருக்கும் என்கிற கோணத்தில் ஒவ்வொரு சிறைகளிலும் ஆய்வு செய்தபோது தான், ஆக்ரா சிறையில் ஒரு குற்றவாளியின்  கை ரேகையுடன் ஒத்துபோனது. பின்னர் அந்த குற்றவாளி யார் என்று பார்த்தபோது பவாரியா கேங்கை சேர்ந்த ஓம் என்கிற ஓம் பிரகாஷ் என்பது தெரியவந்தது. பின்னர் விசாரணை தொடங்கியபோது தான் 1996- 2004 ஆம் ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் 24 இடங்களில் அந்த கேங் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அதன்பின்னர் தான் வடமாநிலத்தை நோக்கி தமிழக போலீஸ் உயிரை பணயம் வைத்து சென்று குற்றவாளிகளை தூக்கிவந்தனர். இதில், சில என்கவுண்டர் சம்பவமும் நடந்தது.” என்றனர்.

தொந்தரவு

இந்த வழக்கை நேரடியாக விசாரணை செய்த காவல்துறை ஓய்வுப்பெற்ற மேலதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “பவோரியா கேங் தமிழகத்தை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று, இங்குள்ளவர்கள் மானத்திற்கு பயந்து எதையும் பெரிதாக வெளியில் சொல்லமாட்டார்கள் என்பது தான். அதன்மூலம் தான் இவர்களது பேட்டன் கொலை, கொள்ளைகளை தாண்டி பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வது என இருந்து வந்தது.

அப்படி அந்த நேரத்தில் பல வழக்குகள் வெளியில் தெரியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். சில சம்பவம் நடந்து புகாரே வராமல் போகியுள்ளது. அந்த வகையில் சேலத்தில் நடந்த தாளமுத்து நடராஜன் கொலையில் பின்னணியில் 18 குற்றவாளிகள் இருப்பது கண்டறியப்பட்டன. அதில், முக்கிய குற்றவாளியாக சைல்தர் சிங் எனும் நபர் தான் மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது. இந்த டீம் பெரிய ஒரு சம்பவத்தை செய்த பிறகு, அதில், இருந்து தப்பிப்பதற்காக  சிறிய வழக்குகளில் சிறைக்குள் சென்றுவிடுவார்கள். அப்படி சிறைக்குள் இருந்தவர்களை தான் இந்த வழக்கில் கஸ்டடி எடுத்து விசாரணை செய்தது” என்றனர்.

மேலும் இதுகுறித்து சேலம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசியபோது, “தற்போது சம்பந்தப்பட்ட தாளமுத்து நடராஜன் வழக்கில் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதில், அசோக் (எ) லெட்சுமணன், ராஜேக்ஷ் (எ) குண்டு, ஜெகதீஸ், சைல்தர் சிங் என்று 4 பேர் மட்டுமே சிறையில் இருந்து வந்தனர். அதிலும், ஏற்கனவே (ஏ3) சைல்தர்சிங் பெயிலில் சென்ற நிலையில், தற்போது, (ஏ1) குற்றவாளியான அசோக் (எ) லெட்சுமணன் தனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை.

அந்த சம்பவத்தின்போது தான் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துவந்ததாக கூறி, பெயில் கோரியதால் சேலம் நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்மூலம் போலீஸார் விசாரணை செய்ததில் சம்பந்தப்பட்ட தினத்தன்று அசோக் (எ) லெட்சுமணன் வட மாநிலத்தில் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது தெரியவந்துள்ளது. (ஏ1) குற்றவாளியே வெளியில் தப்பிக்கும் அளவிற்கு வழக்கு உள்ளதால், போலீஸார் ஏதும் ஜோடித்த வழக்கா, உண்மையான குற்றவாளிகள் தான என்று நீதிமன்றம் விசாரித்து வருகிறது” என்றனர்.

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

இதுகுறித்து சேலம் மாநகர காவல் துணை ஆணையர் வேல்முருகனிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் இரண்டு பேர் பெண்கள் ஆவார்கள். அவர்களுக்கு வயது முதிர்வுக்காரணமாக சம்பந்தப்பட்ட வழக்கில் ஆஜாராகாமல் இருந்து வருவதாக தெரியவருகிறது.” என்றார் சுருக்கமாக!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/JailMathilThigil