தொழிலதிபர் கெளதம் அதானி மீது அடிக்கடி புகார்கள் வந்தாலும் அவை ஓரிரு நாளில் காணாமல் போய்விடுவது வழக்கமாக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி அதானி மீது புகார்கள் கூறினாலும் அவை எடுபடாமல் போய்விடுகிறது.
இந்தியா முழுவதும் அதானி நிறுவனம் சோலார் மின் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களைப் பெறுவதற்காக அதானி நிறுவனம் அதிகாரிகளுக்குக் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்திருப்பதாக அமெரிக்கா வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.
இது தொடர்பாக அமெரிக்க வழக்கறிஞர்கள் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதானியும், அவரது உறவினர் சாகர் அதானி உட்பட மொத்தம் 8 பேர் சேர்ந்து, இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்து சோலார் மின் திட்டங்களைப் பெற்று இருக்கின்றனர்.

அதாவது இந்திய மதிப்பில் ரூ.2029 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர். அவ்வாறு லஞ்சம் கொடுத்து பெறப்பட்ட சோலார் மின் திட்டங்களின் மூலம் அடுத்த 20 ஆண்டில் 2 பில்லியன் டாலர் அளவுக்கு லாபம் ஈட்டுவார்கள். அதானியும், அதானி கிரீன் எனர்ஜி அதிகாரி வினீத் ஜெயினும் சேர்ந்து அதிகாரிகளுக்கு ஊழல் கொடுத்து சோலார் திட்டங்களைப் பெற்றதை மறைத்து முதலீட்டாளர்களிடமிருந்து கடனாகவும், பத்திரமாகவும் 3 பில்லியன் டாலர் அளவுக்கு வாங்கி இருக்கின்றனர். லஞ்சம் கொடுப்பதில் தொடர்புடையவர்கள் அதானியைப் பெரிய மனிதர் என்று அடையாள மொழியில் அழைத்துள்ளனர். அதானியின் உறவினர் சாகர் அதானிதான் லஞ்சம் கொடுக்கப்படுவதைத் தனது மொபைல் போன் மூலம் கண்காணித்து வந்தார்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டு குறித்து அதானி நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் இச்செய்தி வெளியானவுடன் அதானி நிறுவனப் பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்தது. கெளதம் அதானியும், சாகர் அதானியும் அமெரிக்காவில் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே புகார் இருக்கிறது.
தற்போது அமெரிக்கா மொத்தம் 8 பேர் மீது குற்றம் சாட்டி இருக்கிறது. அவர்கள் மீது அமெரிக்க லஞ்சம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு அதானி மற்றும் சாகர் அதானியைக் கைது செய்யவும் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்புகார் வெளிவந்த சிறிது நேரத்தில் அதானி பசுமை பத்திரங்களை விற்பனை செய்து 600 மில்லியன் டாலர் அளவுக்குத் தனது நிறுவனத்திற்கு நிதி திரட்டி இருக்கிறார்.

பள்ளிப்படிப்பை 16 வயதில் கைவிட்ட கெளதம் அதானி இன்றைக்கு இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்துடன் இருக்கிறார். கடந்த 10 ஆண்டில் அதானியின் வளர்ச்சி அசுர வேகத்திலிருந்தது. அவரது நிறுவனப் பங்குகள் அனைத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது அவருக்கு 69.8 பில்லியன் டாலர் அளவுக்குச் சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதானி மீதான புகாரைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், அதானி நிறுவனப் பங்கு பரிவர்த்தனை குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும். இது தொடர்பாக அமெரிக்காவின் புகார் எங்களது குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதாக இருக்கிறது. அதானிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து எங்களது கட்சி 100 கேள்வி எழுப்பியது. ஆனால் அதற்கு இது வரை பதிலளிக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய புகாரால் அதானி நிறுவனத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/MadrasNallaMadras

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs