அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தில் ‘அமெரிக்காவைக் காப்பாற்றுங்கள்’ என்ற முன்னெடுப்பை எடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதன் ஒரு பகுதியாக, தற்போது ‘அரசு செயல்திறன் (Department of Government Efficiency’ என்ற துறையைத் தொடங்கியுள்ளார். இந்தத் துறை அரசு அதிகாரத்துவத்தை குறைப்பது, தேவையற்ற விதிமுறைகளை நீக்குவது, வீண் செலவுகளைக் குறைப்பது, கூட்டாட்சி நிறுவனங்களை மறுசீரமைப்பது ஆகியவற்றை செய்யும்.
We are very grateful to the thousands of Americans who have expressed interest in helping us at DOGE. We don’t need more part-time idea generators. We need super high-IQ small-government revolutionaries willing to work 80+ hours per week on unglamorous cost-cutting. If that’s…
— Department of Government Efficiency (@DOGE) November 14, 2024
இந்தத் துறையை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் மற்றும் தொழிலதிபர் விவேக் ராமசாமி தலைமை ஏற்று நடத்துவார்கள் என்று சமீபத்தில் டிரம்ப் அறிவித்தார்.
இதுக்குறித்து எலான் மஸ்க், “இது மிகவும் கடினமான வேலையாக இருக்கும் மற்றும் பல எதிரிகளை சம்பாதித்துக் கொடுக்கும். ஆனால், இதற்கான ஊதியம் ஜீரோ” என்று பதிவிட்டுள்ளார்.
‘ஒருவர் செய்ய வேண்டிய வேலையை, இருவர் செய்யப் போகிறார்கள். அப்போது இவர்கள் ‘செயல்திறன்’ எப்படி இருக்கும்?’ என்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நக்கல் விமர்சனத்திற்கு, ‘உங்களை மாதிரி நாங்கள் சம்பளம் வாங்கப் போவதில்லை. அப்போது நாங்கள் நிச்சயம் செயல்திறன் மிக்கவர்கள் தான்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் பதிலளித்திருந்தார்.
தற்போது, செயல் திறன் துறைக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், “இந்தத் துறையில் பணியாற்ற ஆர்வம் காட்டிய ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு நன்றி. எங்களுக்கு பகுதி நேர ஐடியா உருவாக்குபவர்கள் தேவையில்லை. எங்களுக்கு வீண் செலவை குறைப்பதில் வாரத்திற்கு 80-க்கும் மேற்பட்ட மணிநேரங்களுக்கு வேலை செய்யும் அதிக IQ உடைய சிறிய அரசு புரட்சியாளர்கள் தேவை. நீங்கள் அப்படியானவர் என்றால் விண்ணப்பியுங்கள். இதில் தேர்ந்தெடுக்கப்படும் டாப் 1 சதவிகித விண்ணப்பங்களை எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி பரிசீலிப்பார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.