17 செப்டம்பர் 2024
லெபனானில் சூப்பர் மார்க்கெட் தொடங்கி மக்கள் கூடுகின்ற பல இடங்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்துச் சிதறின. இதில் 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சுமார் 40 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, ஹிஸ்பொல்லா அமைப்பின் அப்போதைய தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், ‘இஸ்ரேல் நம்மை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனால் நம் அமைப்பினர் யாரும் செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்’ என்று உத்தரவிட்டிருந்தார். இதையொட்டியே, ஹிஸ்பொல்லா அமைப்பினர் செல்போனில் இருந்து பேஜருக்கு மாறியிருந்தனர்.

பேஜர் வாங்கும்போதே அதில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு, இந்த சம்பவத்திற்கு அடித்தளம் இட்டு இருந்ததாக தாக்குதலுக்கு பின்பு தகவல்கள் வெளியாகின. இந்தத் தாக்குதலுக்கு பின்னால் ‘இஸ்ரேல்தான் இருக்கிறது’ என்று ஆரம்பத்தில் இருந்தே, ஹிஸ்பொல்லா அமைப்பு குற்றம்சாட்டி வந்தது. ஆனால், அதற்கு இஸ்ரேல் எந்த பதிலும் அளிக்கவில்லை.
‘இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தான் பேஜர் தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தார் என்பதை அவரே ஒப்புகொண்டுள்ளார்’ என்ற தகவலை அவரது செய்தித் தொடர்பாளர் ஓமர் தோஸ்த்ரி நேற்று உறுதி செய்துள்ளார்.
கடந்த வாரம் லெபனான், ஐ.நா தொழிலாளர் நிறுவனத்திடம், ‘இது மனிதநேயத்திற்கு எதிரான பயங்கர போர்’ என்று புகாரளித்தது குறிப்பிடத்தக்கது.
பொது மக்கள் பயன்படுத்தும் சாதனத்தில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி உள்ளது உலக அளவில் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.