தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தேனாறும், பாலாறும் ஓடும் என வாக்குறுதிகளை அள்ளிவிட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றார். ஆனால், மூன்றரை ஆண்டுகள் முடிவடைந்தும் இதுவரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இது ஒட்டுமொத்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் 24 மாதகால அகவிலைப்படி, ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு முதலியவற்றை முடக்கினர். கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை 25 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைந்ததன் மூலம் கருணை அடிப்படையிலான பணிநியமனத்தையும் முடக்கினர். காலிப்பணியிடங்கள் நிரப்பிடவில்லை. ஆசிரியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்ததுதான் இவர்களின் மூன்றாண்டுக் கால சாதனையாக உள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் தமிழக முதலமைச்சர் திருமண நிகழ்வொன்றில் தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்திருந்தார். அதைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தோம்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. புதிய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளார். இதைத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால் நிதி நிலை சரியாகும் வரை எங்களுக்கு ஊதியம் வேண்டாம் என்று தமிழக முதல்வரும் அவரின் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் சகாக்களும் அறிவிப்பார்களா?. நிதிநிலை சரியாகும் வரை எங்களுக்கான ஓய்வூதியம் வேண்டாம் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பார்களா?. நிதி நிலை மோசம் என்று கூறும் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் உயர் அலுவலர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து 10% விட்டுக் கொடுப்பார்களா?.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் சந்தா தொகை தமிழ்நாடு அரசால் தவறுதலாகக் கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கிறோம்.
போக்குவரத்துத் துறை ஊழியர்கள் எப்படி தற்போது ஓய்வூதியப் பயன்கள் ஏதும் கிடைக்காமல் நடுத்தெருவில் விடப்பட்டார்களோ? அதே நிலைமை தான் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கும் வரப்போகிறது. இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். தற்போது ஏன் அழைத்துப் பேசவில்லை.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” என காட்டமாக அறிக்கை விடப்பட்டிருந்தது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “அரசு ஊழியர்களுக்கு திமுக கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாகப் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டுவருவோம் எனத் தெரிவித்திருந்தார்கள். அதைச் செயல்படுத்த முடியாது. இந்தியா முழுவதும் காலாவதியாகி வருகிறது. எனவே அந்த திட்டத்தைச் செயல்படுத்தினால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும். சமீபத்தில் கூட எடப்பாடி பழனிசாமி மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கியிருப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இவ்வளவு கடன் வாங்கி நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அதேநேரத்தில் வருவாயைப் பெருக்க நடவடிக்கை இல்லை. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற முடியாது. ஆனால் காலியான பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்கிற அவர்களது கோரிக்கை நியாயமானது. இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் ரயில்வே துறையைப் போல ஆகிவிடும். ரயில்வேயில் 10 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 4 பேர்தான் இருக்கிறார்கள். அந்த நிலை தமிழகத்தில் வந்துவிட்டால் மிகவும் கடினமாகச் சூழல் ஏற்பட்டுவிடும்.

தேர்தல் உள்ளிட்ட அனைத்து அரசு வேலைகளுக்கும் பயன்படுத்த படுப்பவர்கள் ஆசிரியர்கள்தான். அவர்களுக்கு புதிய திட்டங்கள் மூலமும், ஆட்குறைப்பு மூலமும் கூடுதல் நெருக்கடி கொடுக்கிறார்கள். குறிப்பாகத் தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களே இல்லை. எனவே காலிப்பணியிடங்களை நிரப்பினாலே போதும் பெரிய வரவேற்பு இருக்கும். தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அரசு ஊழியர்கள் சண்டை போடுவது வாடிக்கைதான். ஆனால் இது தேர்தல் நேரத்தில் எதிரொலிக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். 6 மாதங்கள் கழித்து 50% கோரிக்கைகள் நிறைவேற்றினால் கூட அதிருப்தி குறையலாம். ஆனால் கூட்டணிதான் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். அதேநேரத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கை எதையுமே அரசு நிறைவேற்றவில்லை என்றால் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb