மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது கட்சி சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்ததை நியாயப்படுத்தி இருக்கிறார்.
அரசியல் கட்சிகளை உடைத்ததால்தான் மக்களவை தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் தோல்வி அடைய நேரிட்டதாக பொதுமக்கள் மத்தியில் பொதுவான ஒரு கருத்து இருக்கிறது. இது தொடர்பாக நிதின் கட்கரி அளித்த பேட்டியில், ”பா.ஜ.க மற்ற கட்சிகளை உடைக்கும் அரசியலில் ஈடுபடவில்லை. சரத் பவார் தனது இளம் வயதில் இதைத்தான் செய்தார். காதல் மற்றும் அரசியலில் அனைத்தும் நியாயமானதுதான். சில நேரங்களில் அது மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. மற்ற நேரங்களில் எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது.

சரத் பவார் மகாராஷ்டிராவில் மரியாதைக்குறிய தலைவர். ஆனால் ஒரு நேரத்தில் அவரது செயல்களால் அனைத்து கட்சிகளும் பாதிக்கப்பட்டன. சரத் பவார் சிவசேனாவை உடைத்து அதிலிருது சகன் புஜ்பால் மற்றும் சில தலைவர்களை எடுத்துக்கொண்டார். ஆனால் அரசியலில் இது வழக்கமான ஒன்றுதான். இதில் சரி தவறு என்பது முக்கியமல்ல. காதல் மற்றும் அரசியலில் அனைத்து செயல்களும் நியாயமானதே” என்று தெரிவித்தார். மக்களவை தேர்தலில் பா.ஜ.க அறுதிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தோல்வியும் முக்கிய காரணமாகும்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை பா.ஜ.க தலைமை தொடர்ந்து ஒதுக்கி வருகிறது. அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனது துறையில் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பணிகளில்கூட நிதின் கட்கரிக்கு பெரிய அளவில் எந்த வேலையும் கொடுக்கப்படவில்லை.
இதனால் விதர்பா பகுதியில் மட்டும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நிதின் கட்கரிக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இருப்பதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முடியாமல் பிரதமர் நரேந்திர மோடி தவிப்பதாக பா.ஜ.க உட்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.