பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறார்.
2026 சட்டசபை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போது இருந்தே தயாராகி வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுகளும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ‘ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். தேர்தல் சமயத்தில்தான் அது முடிவு செய்யப்படும்’ என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கப்போவதாக தி.மு.க-வினர் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “பொதுவாக பிரதமர் மாநில முதல்வர்களை மட்டுமே சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால், ஒரு அமைச்சரான உதயநிதி பிரதமர் மோடியை எளிதில் சந்தித்து பேசி வருகிறார்.
இதன்மூலம், தி.மு.க., பா.ஜ.க இடையே மறைமுக கூட்டணி இருப்பதை உணர முடியும். அதுபோன்ற நிலை அ.தி.மு.க. வுக்கு கிடையாது. பா.ஜ.க-வுடன் இப்போது மட்டுமல்ல, எப்போதும் கூட்டணி கிடையாது.” என்றார்.

எடப்பாடி சொன்ன ஒத்த கருத்து என்றால் என்ன? என்று கேட்டதற்கு, “திமுக என்ற மக்கள் விரோத கட்சியை விரட்டியடிக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் பாஜகவை தவிர்த்து, கட்சிகள் ஒத்த கருத்துக்களோடு வரும் போது அவர்களுடன் கூட்டணி வைப்போம் என்பதைத்தான் அப்படி சொன்னார். அவர் சொன்னதை திரித்து, மாற்றி கூறி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். நிச்சயம் மக்கள் இதனை நம்ப மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb