ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரில் ஸ்நோலின் என்கிற இளம்பெண்ணும் ஒருவர். நடிகர் மற்றும் த.வெ.க கட்சியின் தலைவரான விஜய் அப்போதே ஸ்நோலினின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லி நிதியுதவியும் செய்திருந்தார். இப்போது விஜய் கட்சி தொடங்கி மாநாடு நடத்தியிருக்கும் சூழலில் ஸ்நோலினின் அம்மா உட்பட அவரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் த.வெ.க-வில் இணைந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. தகவலை உறுதிப்படுத்த ஸ்நோலினின் தாய் வனிதாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.

அவர் நம்மிடம் கூறியதாவது, “ஸ்நோலின் இறந்த ரெண்டாம் நாளு துக்கம் தாங்க முடியாமல் நாங்கெல்லாம் வீட்டு வாசல்ல இடிந்து போய் உட்கார்ந்து இருந்தோம். அந்த நடுராத்திரிலதான் விஜய் ஒரு மோட்டர் பைக்ல எங்க வீட்டுக்கு வந்துருந்தாரு. ‘அன் டைம் ஆகிப்போச்சு… இந்த நேரத்தில் வந்ததுக்கு மன்னிச்சுருங்கம்மா..’னு சொன்னார். தப்பு செஞ்சவங்களெல்லாம் அந்த குற்றவுணர்ச்சியே இல்லாமல் இருக்கும்போது விஜய் தம்பி மன்னிப்பு கேட்டதை என்னால தாங்கிக்கவே முடியலை. நீங்க அப்படியெல்லாம் சொல்லாதீங்க தம்பி. எங்க துக்கத்தில் பங்கெடுக்க நீங்க வந்ததே நிறைவா இருக்குன்னு சொன்னேன். உட்கார சேர் போட்டப்போ அதுல கூட உட்காரமா எங்க கூட உட்கார்ந்து பேசி வீட்டு சின்ன குழந்தைகளை அள்ளி கொஞ்சி முத்தம் கொடுத்துட்டு போனார். அந்த அன்புக்காகத்தான் இப்ப விஜய் தம்பி தொடங்கியிருக்கிற கட்சியிலயும் சேர்ந்திருக்கிறேன்.
மாநாட்டுக்கு எங்க ஊரு ஆளுங்களோட நானும் போயிட்டு வந்தேன். அவர நேர்ல சந்திச்சு ஒரு மனு கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா, அங்க லட்சக்கணக்குல ஜனம் கூடியிருந்துச்சு. அந்த கூட்டத்தைப் பார்த்த உடனேதான் எனக்கு இன்னும் நெகிழ்ச்சி ஆகிருச்சு. இவ்வளவு செல்வாக்குள்ள ஒரு புள்ள நம்ம வீட்டுக்கு அவ்ளோ எளிமையா வந்துட்டு போயிருக்கேன்னு நினைச்சப்ப அவர் மேல இன்னும் மரியாதை கூடிருச்சு.

ஸ்நோலினுக்கு நடந்தது ஒரு வன்முறை. அவ இறந்து 7 வருசம் ஆகப்போகுது. அவ இருந்திருந்தா இப்போ கல்யாணம் பண்ணி பேரன் பேத்திகளைப் பெத்துக் கொடுத்திருப்பா. எங்க குடும்பமும் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துருக்கும். அன்னைக்கு நடத்தப்பட்ட அந்த போலீஸ் வன்முறை எல்லாத்தையும் உருக்குலைச்சுருச்சு.

என் பிள்ளைக்கும் எங்க குடும்பத்துக்கும் நடந்தது வேற யாருக்கும் நடக்கக்கூடாதுன்னு ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன். ஆனா, அதுக்கு ஒரு முடிவே இல்லை. எங்க ஊர் பக்கத்துலயே ஜெயராஜையும் பென்னிக்ஸையும் போலீஸ் அடிச்சே கொன்னாங்க. நமக்கு நடந்ததுதான் அவங்களுக்கும் நடந்துருக்குன்னு அவங்க வீட்டுக்குப் போய் ஆறுதல் சொல்லிட்டு வந்தேன். எந்த ஆட்சி மாறினாலும் இந்த மாதிரியான வன்முறைங்களுக்கு மட்டும் முடிவே இல்லை. அதுக்குதான் ஒரு மாற்றம் வரணும்னு விரும்புறேன். அந்த மாற்றம் விஜய்யா இருப்பாருன்னு நம்புறேன்.
மேலும், நாங்க கஷ்டத்துல இருந்தப்ப அவர் எங்களுக்காக வந்து நின்னாரு. ஸ்நோலினுக்கும் விஜய்ன்னா அவ்வளவு இஷ்டம். அந்த அன்புக்காகத்தான் விஜய் கட்சில சேர்ந்து அவருக்காக உழைக்கணும்னு முடிவு பண்ணி, கட்சிலயும் சேர்ந்துட்டேன். விஜய் தம்பியை நேர்ல பார்க்க முடிஞ்சா ஸ்டெர்லைட் இறந்து போன போராளிகளுக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டணும் கோரிக்கை வைக்கணும்னு இருக்கேன்.” என உருக்கமாகப் பேசி முடித்தார் ஸ்நோலினின் அம்மா.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY