அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இன்று வெற்றி பெற்றிருக்கிறார்.
டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2020-ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடனிடம் தோல்வியடைந்தது முதலே, வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட கலவரம் உள்ளிட்ட பல விவகாரங்களில் சிக்கினார். அதில் ஒன்று, 2006-ல் ட்ரம்ப் தன்னுடன் நெருக்கமாகப் பழகியதாகவும், 2016 தேர்தலின்போது அதை மறைக்க அவர் தனக்குப் பணம் கொடுத்ததாகவும் ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற நடிகை குற்றச்சாட்டு வைத்த வழக்கும் ஒன்று.
பின்னர், ட்ரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் அந்த நடிகைக்கு அவர் பணம் கொடுத்திருப்பது தெரியவந்தது. இதில், நடிகைக்கு அவர் பணம் கொடுத்தது சட்டப்படி அங்கு தவறு இல்லை என்றாலும், `தன்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு உதவும் வகையில் அந்தச் செலவைச் சட்ட செலவுகள் எனத் தேர்தலில் ஆவணங்களைத் தாக்கல் செய்தது ஃபெடரல் பிரசார நிதிச் சட்டத்தை மீறிய செயல்’ என்று அரசு தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பொய்யான வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ததாக டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் பதிவுசெய்யப்பட்டன. கடந்த மே மாதம் நீதிமன்றத்தில் 12 நீதிபதிகள் முன்னிலையில் இரண்டு நாள்கள் விவாதங்கள் நடைபெற்றன. அதன் முடிவில், 34 குற்றச்சாட்டுகளில் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அமெரிக்க வரலாற்றில், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட முதல் முன்னாள் அதிபரானார் ட்ரம்ப்.
இந்தத் தீர்ப்புக்கு முன்பாகவே, நவம்பரில் நடைபெறும் அதிபர் தேர்தலில் பைடனை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் தான் போட்டியிடுவார் என்று முடிவாகியிருந்ததால், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் அமெரிக்கத் தேர்தலில் அதிபர் வேட்பாளராகக் களமிறங்கும் சூழல் முதல்முறையாக உருவானது. அதேசமயம், குற்றவாளி என்ற முத்திரை அவருக்குத் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று பேச்சுகள் அடிபட்டன. அமெரிக்காவில் பொய்யான வணிகப் பரிவர்த்தனை பதிவுகளுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்ற நிலையில் தண்டனை விவரங்கள் ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், ட்ரம்ப்புடனான விவாதம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகள் நிகழ்ச்சிகளில் பைடன் உளறியது, வயது முதிர்வு காரணமாகச் சோர்வாகக் காணப்பட்டது ஆகியவை பேசுபொருளாக, அவருக்குப் பதில் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவித்தது ஆளும் ஜனநாயகக் கட்சி. அதிபராகக் கமலா ஹாரிஸ் வெற்றிபெறுவார் என ஜனநாயகக் கட்சி கூறத் தொடங்கிவிட்டது.
மறுபக்கம், ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கில் தேர்தல் முடியும் வரை தண்டனை விவரங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், கமலா ஹாரிஸுக்கு முன்னாள் அதிபர் ஒபாமா, பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவிக்க, ட்ரம்ப்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் களமிறங்கினார். அதைத்தொடர்ந்து, கமலா ஹாரிஸுக்கும் ட்ரம்ப்புக்குமான தொலைக்காட்சி விவாதம், பிரசாரக் கூட்டத்தில் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, கமலா ஹாரிஸ் மீது ட்ரம்ப் முன்வைத்த இன ரீதியான விமர்சனம் எனத் தேர்தல் பிரசார களம் சூடுபிடித்தது.
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில், நேற்று வாக்குப் பதிவு தொடங்கியது. பெண் அதிபரைத் தந்த கட்சி என்ற வரலாற்றுச் சிறப்பு தங்களுக்குக் கிடைக்கும் என ஜனநாயகக் கட்சியும், இரண்டாவது முறையாக ட்ரம்ப் அதிபராவார் எனக் குடியரசுக் கட்சியும் வெற்றியை எதிர்நோக்கி விழிவிரித்துக் காத்திருந்தனர். இந்த நிலையில், மொத்தமுள்ள 538 எலெக்டோரல் ஓட்டுகளில் அதிபராக வெற்றிபெறுவதற்குத் தேவையான 270-க்கும் மேலான எலெக்டோரல் ஓட்டுகளைப் பெற்று இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ட்ரம்ப்.

இதன்மூலம், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் அமெரிக்காவில் முதல்முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். மேலும், தன்னை நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தபோது, “நான் மிகவும் அப்பாவி. இந்த நாட்டுக்காகவும், அரசியலமைப்புக்காகவும் நான் போராடுகிறேன். இங்கு என்ன நடந்தது என்பதை அனைவருமே அறிவர். இதுவொரு மோசமான விசாரணை. உண்மையான தீர்ப்பு நவம்பர் 5-ம் தேதி மக்கள் அளிப்பார்கள்.” என்று கூறியதை சாத்தியமாக்கியிருக்கிறார் ட்ரம்ப். ட்ரம்ப்பின் இத்தகைய வெற்றிக்கு இந்தியப் பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.