Canada: கனடாவில் இந்துக் கோயிலில் தாக்குதல்… பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம்!

காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தும் காலிஸ்தானி தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கனடாவில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது. குறிப்பாக, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்குத் தொடர்பிருப்பதாகக் கனடாவும், அவ்வாறு எதுவும் இல்லை எனவும் இந்தியாவும் மாறி மாறி கூறிவருகிறது.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. இவ்வாறான சூழலில், கனடாவின் பிராம்ப்டனில் இந்து சபா கோயில் வளாகத்தில் பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவில், காலிஸ்தான் கொடியேந்திய சிலர் இந்து சபா கோயில் வளாக கேட் (Gate) அருகே பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மறுபக்கம், கனடா காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் கைதுசெய்யவில்லை.

இதனால், இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தன. அதில், கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா, கனடாவின் அரசியல் இயந்திரம் மற்றும் சட்ட அமலாக்கம் ஆகிய இரண்டிலும் தீவிரவாத சக்திகள் ஊடுருவியிருப்பதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிலையில், அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

இதுதொடர்பாக, எக்ஸ் தளத்தில் ஜஸ்டின் ட்ரூடோ, “பிராம்டனில் இந்து சபா கோயிலில் நடந்த வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கனேடிய குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களின் நம்பிக்கையைச் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பின்பற்ற உரிமை இருக்கிறது. இந்து சமூகத்தினரைப் பாதுகாப்பதிலும், இந்தச் சம்பவத்தை விசாரிப்பதிலும் துரிதமாகச் செயல்பட்ட பீல் பிராந்திய காவல்துறைக்கு (Peel Regional Police) நன்றி.” என்று ட்வீட் செய்திருக்கிறார்.