சிதம்பரம்: `கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் கொடிமரம் வைக்கக் கூடாது’ – தீட்சிதர்கள் எதிர்ப்பால் பதற்றம்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் கோயில் வளாகத்திற்குள்தான், ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலும் அமைந்திருக்கிறது. ஆனால் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டிலும், கோவிந்தராஜ பெருமாள் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நடராஜர் கோயிலில், ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனமும், ஆனித் திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு கடந்த 400 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் மற்றும் கொடிமரம்

`சைவ வைணவ பாகுபாடு காரணமாக தீட்சிதர்களால் திட்டமிட்டு தடுக்கப்பட்டு வரும், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை நடத்த வேண்டும்’ என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேசமயம், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு பிரம்மோற்சவத்தை நடத்தக் கூடாது என்று, நடராஜர் கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் உள்ள கொடிமரம் வெயில் மழையால் பழுதடைந்திருப்பதால், பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற இந்து சமய அறநிலையத்துறை, அங்கு புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்தது. ஆனால் `வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் புதிய கொடிமரம் அமைக்கக் கூடாது’ என தீட்சிதர்கள் தரப்பு எதிர்ப்புப் தெரிவித்தனர். ஆனால், `பிரம்மோற்சவம் நடத்துவது குறித்த வழக்குதான் நீதிமன்றத்தில் இருக்கிறதே தவிர, கொடி மரம் வைப்பதற்கும், கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கும் எதிராக எந்த வழக்குகளும் இல்லை.

வாக்குவாதம் செய்த தீட்சிதர்கள்

எனவே `நவம்பர் 4-ம் தேதி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் புதிய கொடிமரம் வைக்கப்படும்’ என்று தீட்சிதர்கள் தரப்புக்கு கடிதம் அனுப்பியது இந்து சமய அறநிலையத்துறை. அத்துடன் அதற்கு பாதுகாப்பு வேண்டும் என்று காவல்துறைக்கும் கடிதம் அனுப்பியது. அதன்படி நேற்று இரவு, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலின் அறங்காவலரான சுதர்சன் மற்றும், பட்டாச்சார்யார்கள் கொடி மரத்திற்கு பூஜை செய்தனர்.

அப்போது அங்கு வந்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள், புதிய கொடிமரம் அமைக்கக் கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதையடுத்து அங்கு சென்ற சிதம்பரம் டி.எஸ்.பி லாமோக் தலைமையிலான போலீஸார், இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் தீட்சிதர்கள் தரப்பு கொடிமரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கொடிமரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் திட்டமிட்டபடி புதிய கொடிமரம் அமைக்கப்படும் என்று தெரிவித்த கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் உள்ளிட்ட அதிகாரிகள், இன்று காலை 6 மணிக்கு போலீஸாருடன் சென்றனர்.

கடலூர் இந்து சமயம் அறநிலையத்துறை ஆணையர் பரணிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் கோயிலில் ஆய்வு

ஆனால் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பணி தற்காலிகமாக நிறுத்தபட்டிருக்கிறது. இந்த நிலையில் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வரும் தெய்வீக பக்தர்கள் பேரவையின் நிறுவன தலைவர் ஜெமினி என்.ராதாவிடம் பேசியபோது, “உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் நந்திவர்ம பல்லவ மன்னரால் கி.பி. 726-775-ம் ஆண்டு தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கட்டப்பட்டது. இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி 1133 ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கட்டுமான பணிகள் மேற்கொண்டபோது, சைவ வைணவ பாகுபாட்டால் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சிலை அப்புறப்படுத்தப்பட்டு கடலில் வீசப்பட்டது.

அதன் பின்னர் கிருஷ்ணப்ப நாயக்க மன்னரால் கி.பி 1564-1572 ம் ஆண்டு தற்போதுள்ள கோவிந்தராஜ பெருமாள் சிலை கோயிலில் நிறுவப்பட்டு, கொடிமரத்துடன் கூடிய தனி சன்னதி அமைக்கப்பட்டதாக வரலாறு உள்ளது. எங்களுக்கு சொந்தமான கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட உரிமையில்லை என்று கூறி வரும் தீட்சிதர்கள், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் கொடிமரம் அமைக்க விடாமல் அடாவடி செய்து வருகிறார்கள்.

ஜெமினி என்.ராதா

இப்படித்தான் கடந்த 400 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடத்த விடாமல் தீட்சிதர்கள் தடுத்து வருகின்றனர்” என்றார். இதற்கிடையில் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் கொடிமரம் அமைக்கக் கூடாது என சிதம்பரம் நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தொடுத்திருந்த வழக்கின் மீது இன்று நடைபெற்ற விசாரணையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டுமென்று கூறி, வழக்கின் விசாரணையை 20-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.