திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 7வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சித்ரா இவரது கணவர் சக்தி கட்சியில் வார்டு செயலாளராகவும், நகரச் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். அதே வார்டில் அ.தி.மு.க வார்டு செயலாளராக இருப்பவர் ரமேஷ் இவரது மனைவி சத்யா. நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 7வது வார்டில் தி.மு.க சார்பில் சித்ராவும், அ.தி.மு.க சார்பில் சத்யாவும் போட்டியிட்டனர். இதில் சித்ரா வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார்.
லண்டனில் வேலை செய்த சக்தி பணபலம் மிக்கவர். அதனால் தன் வார்டில் தன்னைத் தவிர வேறு பெரிய ஆள் யாரும் இருக்கக் கூடாது என்ற மனப்பான்மையில் வலம் வரக்கூடியவர் என்கிறார்கள். அ.தி.மு.க-வைச் சேர்ந்த சக்தி, நகராட்சித் தேர்தல் சமயத்தில்தான் கட்சி மாறி தி.மு.க-விற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தன் மனைவியை எதிர்த்து ரமேஷ் மனைவி போட்டியிட்டதை விரும்பாத சக்தி, ரமேஷ் மீது கோபத்திலிருந்துள்ளார். இதனால் இருதரப்பும் இடையே அவ்வப்போது மோதல் நிலவி வந்துள்ளது. இந்நிலையில், நேற்று (நவம்பர் 3) இரவு சக்தி மற்றும் அவரது நண்பர்களாக தி.மு.க-வைச் சேர்ந்த சேனா.ரவி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் தர்மதுரை ஆகியோர் மாரியம்மன் கோயில் பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது மூன்று பேரும் மது போதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து ரமேஷுக்கு போன் செய்த சக்தி, அவரைத் தகாத வார்த்தையில் திட்டப் பதிலுக்கு ரமேஷும் திட்டியுள்ளார். அப்போது, “தைரியமான ஆளா இருந்தால் நீ நேரில் வந்து பார்டா” என ரமேஷிடம் சக்தி கூறியுள்ளார். இதையடுத்து ரமேஷ் சிலருடன் சக்தி இருந்த இடத்துக்குச் சென்றுள்ளார். அப்போது இருதரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சக்தி, சேனா. ரவி, தர்மதுரை மூன்று பேரும் கட்டையால் ரமேஷ் தரப்பை அடிக்க அவருடன் வந்தவர்கள் ஓடி விட்டனர். பின்னர் சக்தி அரிவாளால் ரமேஷ் தலையில் வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி டி.எஸ்.பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார். டி.எஸ்.பியுடனும் சக்தி தரப்பினர் வாக்கு வாதம் செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். சேனா. ரவி, தர்மதுரை இரண்டு பேரையும் கைது செய்வதாக டி.எஸ்.பி கூறியுள்ளார். உடனே, “நாங்க யார் தெரியுமா? எங்களைக் கைது செய்வியா?” எனக் கேட்ட சேனா.ரவி, டி.எஸ்.பி சட்டையைப் பிடித்து விட்டார்.
இதனால் அங்குச் சென்ற போலீஸார் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத டி.எஸ்.பி, “என் சட்டையை பிடிக்குறீங்களா” எனக் கேட்டார். அதற்குச் சக்தி, “சார் மன்னிச்சிடுங்க சார்” என இரண்டு முறை சொன்னார். சேனா. ரவி, தர்மதுரை இரண்டு பேரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றினார் டி.எஸ்.பி.
அத்துடன், “என் சட்டையை எப்ப பிடித்தீங்களோ அப்பவே உங்களுக்கான மரியாதை போயிடிச்சி. நீங்க யார்கிட்ட வேண்டுமானாலும் பேசுங்க நான் பேஸ் பண்ணிக்கிறேன்” எனச் சொல்லிவிட்டு இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் மன்னார்குடி அரசியல் வட்டத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சக்தி, சேனா.ரவி. தர்மதுரை ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs