தீபாவளியன்று மருமகனை வெளியுலகிற்கு அறிமுகம் செய்துவைத்த ராகுல் காந்தி! – அரசியலில் இறக்க அச்சாரமா?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திருமணமே செய்து கொள்ளவில்லை. ராஜீவ் காந்தி குடும்பத்தில் இருந்து ஏற்கனவே ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும், தாயார் சோனியா காந்தியும் அரசியலில் இருக்கின்றனர். தற்போது ராகுல் காந்தி காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான் ராஜீவ் வதேராவை வெளியுலகிற்கும், அரசியலுக்கும் அறிமுகம் செய்துள்ளார். தனது சோசியல் மீடியா பக்கத்தில் ராகுல் காந்தி இரட்டை விரல்களை தூக்கிக்காட்டி ரைஹானுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதனை பார்த்த காங்கிரஸ் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ராகுல் காந்தி தனது மருமகனை அரசியலுக்கு அறிமுகம் செய்திருப்பதாக கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ரைஹான் நேரு குடும்பத்தில் 5வது தலைமுறை அரசியல்வாதியாவார்.

ரைஹான் தாயார் பிரியங்கா காந்தி தற்போது வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். பிரியங்கா காந்திக்கு ஆதரவாக தேர்தல் பிரசார வேலைகளில் ரைஹான் ஈடுபட இருப்பதாக தெரிகிறது. எனவேதான் ராகுல் காந்தி முறைப்படி தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரைஹானை வெளியுலகிற்கு அறிமுகம் செய்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் மக்கள் எப்படி தீபாவளி கொண்டாடுகின்றனர் என்பது குறித்தும், தீபாவளியின் மகத்துவம் குறித்து ராகுல் காந்தி தனது மருமகனிடம் பேசிக்கொண்டு வருகிறார். அதோடு தனது வீட்டிற்கு பெயின்ட் அடிப்பவர்களுடன் சேர்ந்து பெயின்ட் அடிக்கவும் ராகுல் காந்தி கற்றுக்கொண்டது போன்று அவ்வீடியோ இருந்தது.

இதற்கு முன்பு ரைஹான் வெளியுலகிற்கு வந்தது கிடையாது. 24 வயதாகும் ரைஹான் புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். வனவிலங்குகள், தெருவோர வியாபாரங்களை அதிக அளவில் புகைப்படம் எடுத்து அதனை டெல்லி மற்றும் மும்பையில் தனியாக கண்காட்சிக்கு வைத்திருக்கிறார். ராகுல் காந்தி அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு தற்போது தனது தாயார் வீட்டில் இருக்கிறார். தீபாவளிக்காக வீட்டிற்கு பெயின்ட் அடிப்பவர்களுடன் கலந்துரையாடுவது போலவும், மருமகனுடன் சேர்ந்து பெயின்ட் அடிப்பது போலவும் அவர் வெளியிட்ட வீடியோ காட்சிகள் இருந்தது.