Sudan Civil War: பாலியல் கொடுமைகளுக்கு அஞ்சி பெண்கள் தற்கொலை… சூடானில் என்ன நடக்கிறது?

தற்கொலை செய்துகொள்ளும் பெண்கள்…

சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்துவரும் சூழலில் ஆயுதமேந்திய படைகள் பாலியல் வக்கிரங்களை ‘போர் தந்திரமாக’ பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருகின்றன.

துணை ராணுவப்படையினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பெருமளவில் பெண்கள், குழந்தைகள் உள்நாட்டுக்குள்ளேயோ, அண்டை நாடுகளுக்கோ தப்பி ஓடுகின்றனர்.

இந்த ஆண்டின் மிகப் பெரிய இடப்பெயர்வுகள் சூடானில் நடந்துள்ளது என்கிறது ஐ.நாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM – International Organization for Migration). அதே வேளையில், சூடானுக்கான ஐ.நா சுதந்திர சர்வதேச உண்மை கண்டறியும் குழு, ஆயுதமேந்திய படையினர் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை குறிவைத்து வேட்டையாடுவதாக கூறியிருக்கிறது.

சூடானில் பாலியில் வன்கொடுமை..

உண்மை கண்டறியும் பணியின் தலைவர் முகமது சண்டே ஓத்மான், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் அடிமைகளாக கடத்தப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் சூடானில் எந்த பகுதியும் பாதுகாப்பானது அல்ல என்றும் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி உமர் அல் பஷீர் கடந்த 2019-ம் ஆண்டு காலமானது முதல் சூடானில் Sudanese Armed Forces (SAF) மற்றும் Rapid Support Forces (RSF) இடையில் அதிகாரத்துக்கான போட்டி கனன்று கொண்டிருந்தது. கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டுப்போர் வெடித்தது. இது பல்லாயிரக் கணக்கான மக்கள் இறப்புக்கும் பரந்த அளவில் மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாக அமைந்தது.

கடந்த வாரம் கெசிரா பகுதியில் 124 பேர் RSF தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதே பகுதியில் பாலியில் வன்கொடுமைகளுக்கு உள்ளான பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர். சூடானில் பெரும்பகுதிகள் SAF அமைப்பின் ஆளுகையில் இருக்கின்றன. RSF சில இடங்களைக் கையில் வைத்திருப்பதுடன் பல இடங்கள் தொடர் தாக்குதல்களை மேற்கொள்கிறது.

மத்திய சூடானில் பெண்கள் கூட்டு பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அடிமைகளாக ஆக்கப்படுது குறித்த அச்சத்தால் தற்கொலை செய்துகொள்வதாக ஐ.நாவின், ஆப்பிரிக்கா கொம்பு பிரதேசத்தில் பெண்களுக்கான மூலோபாய முன்முயற்சி இயக்குனர் ஹாலா அல்-கரீப் கூறியுள்ளார்.

(ஆப்ரிக்காவின் கொம்பு பிரதேசம் என்பது சூடான், எரித்திரியா, எத்தியோப்பியா, ஜிபூட்டி மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு. இதை சோமாலியா தீபகற்பம் என்றும் அழைக்கின்றனர்.)

சூடான் மக்களின் பாதுகாப்பின்மை..

இரண்டு அமைப்புகள் மீதும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு அமைப்புகளுமே குடிமக்கள் மீது போர் குற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றன.

ஆவணப்படுத்தப்பட்ட பாலியல் குற்றங்களில் பெரும்பாலும் RSF அமைப்பே ஈடுபட்டுள்ளது. கூட்டுப்பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கைது செய்த பெண்கள், சிறுமிகள் மீதான வன்கொடுமைகள் என குற்றப்பட்டியல் நீள்கிறது. உலக நாடுகள் சூடான் மக்களின் பாதுகாப்பின்மை குறித்து கவலை தெரிவித்துள்ளன.

இடப்பெயர்வுகள்

சூடானின் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காடு நபர்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர். 1.1 கோடி மக்கள் உள்நாட்டுக்குள்ளும் 31 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. போர் பதற்றத்துடன் நாடு முழுவதும் நோய்களும் பரவி வருகின்றன. மக்கள் ஒருவேளை உணவுக்கே அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சூடான் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக கிட்டத்தட்ட 2.5 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுவர் என ஐ.நா எச்சரித்திருக்கிறது.

பசி, நோய்கள் மற்றும் பாலியல் வன்முறைகள் துரத்த பெருந்துயர்களை சுமந்தபடி, வாழ்விடங்களை விட்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் சூடான் மக்கள்.