தொகுதி பங்கீட்டில் பாஜக வியூகம்
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணியும், சிவசேனா(உத்தவ்) தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியும் பிரதான கூட்டணி கட்சிகளாக போட்டியிடுகின்றன. அதிகமான தொகுதியில் இருமுனைப்போட்டி நிலவுகிறது.
ஆம் ஆத்மி கட்சி போட்டியில் இருந்து விலகிக்கொண்டது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடந்த 2022, 23ம் ஆண்டில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் தலைமையில் இரண்டாக உடைந்தது. அக்கட்சிகள் இப்போது ஆளும் கட்சிகளாக இருக்கின்றன. ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவாரின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு சில தொகுதியில் வலுவான வேட்பாளர்கள் கிடைக்காமல் இருந்தது. அதோடு தொகுதி பங்கீட்டில் சில தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலை பா.ஜ.கவிற்கு ஏற்பட்டது.

கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் பாஜக போட்டி
இதனால் பா.ஜ.க தலைவர்கள் சிலருக்கு தொகுதிகள் கிடைக்காமல் போனது. உடனே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை கொடுத்துவிட்டு அத்தொகுதியில் தங்களது கட்சி தலைவர்களை கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் பா.ஜ.க போட்டியிட வைத்துள்ளது. பா.ஜ.க 152 தொகுதியில் போட்டியிடுகிறது. அதோடு 17 தலைவர்களை கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட வைத்திருக்கிறது. இதன் மூலம் பா.ஜ.க 169 தொகுதியில் போட்டியிடுகிறது. மும்பையில் மும்பாதேவி தொகுதியில் பா.ஜ.க நிர்வாகி சாய்னா என்.சி. கடைசி நேரத்தில் சிவசேனாவில் சேர்ந்து அக்கட்சி சார்பாக போட்டியிடுகிறார். சாய்னா ஒர்லி தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அத்தொகுதியை கொடுக்க சிவசேனா மறுத்துவிட்டது.
இதே போன்று அந்தேரி கிழக்கு தொகுதியில் பா.ஜ.க நிர்வாகி முர்ஜி பட்டேல் கடைசி நேரத்தில் சிவசேனா வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருக்கிறார். பீவண்டி தொகுதியிலும் அதே போன்று பா.ஜ.க நிர்வாகி சந்தோஷ் ஷெட்டி சிவசேனாவில் சேர்ந்து கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ராவ்சாஹேப் தன்வே மகளுக்கு கூட சீட் கிடைக்கவில்லை. இதனால் ராவ்சாஹேப் தன்வே மகள் சஞ்ஜனா ஜாதவ் சிவசேனாவில் சேர்ந்து கன்னாட் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வாபஸ் பெற பேச்சுவார்த்தை..
பா.ஜ.க முன்னாள் அமைச்சர் நாராயண் ரானே மகன் நிலேஷ் ரானேயும் சிவசேனாவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறார். இதே போன்று பொய்சர் தொகுதியில் பா.ஜ.க நிர்வாகி விலாஸ் தாரேயை சிவசேனா வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. இதே போன்று துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் பா.ஜ.க 4 வேட்பாளர்களை திணித்திருக்கிறது. சிவசேனா(ஷிண்டே)வில் 12 பா.ஜ.க தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இந்திய குடியரசுக்கட்சிக்கு பா.ஜ.க ஒரு தொகுதியை கொடுத்தது. அந்த ஒரு தொகுதியிலும் தனது கட்சியை சேர்ந்த அமர்ஜீத் சிங் என்பவரை வேட்பாளராக அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டது. மேலும் சமாஜ்வாடி கட்சியும் ஒவைசியின் கட்சியும் சில தொகுதியில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு கொடுத்து வேட்பு மனுவை வாபஸ் பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

7994 வேட்பாளர்கள்
மகாராஷ்டிரா முழுவதும் 7994 வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு ஏற்கப்பட்டுள்ளது. இது தவிர 921 மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது. வரும் 4ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். அன்றைக்கே இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
மகாராஷ்டிரா முழுவதும் 9.7 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதில் 47392 வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள் ஆவர். 22.22 லட்சம் பேர் 18 முதல் 19 வயது வரையுள்ள வாக்காளர்கள் ஆவர். நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.