பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் டெப்ராய் இன்று காலமானார்.
மேகாலாயா மாநிலத்தில் பிறந்தவர் பிபேக் டெப்ராய். கொல்கத்தா பிரசிடென்சி காலேஜி, டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ், கேம்பிரிட்ஜ் டிரினிட்டி காலேஜ் ஆகிய கல்லூரிகளில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
இவர் இந்தியாவை சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் ஆவார். தற்போது, இவர் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

பொருளாதார நிபுணராக மட்டுமல்லாமல், பிரசிடென்சி காலேஜ் உள்ளிட்ட பல கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடமும் எடுத்துள்ளார். மத்திய நிதி அமைச்சகத்தின் அம்ரித் காலின் நிபுணர்கள் கமிட்டியின் முன்னாள் தலைவராக இருந்துள்ளார். 2015-ம் ஆண்டு முதல் 2019 வரை நிதி அயோக்கில் உறுப்பினராக செயலாற்றியுள்ளார்.
2016-ம் ஆண்டு அமெரிக்க – இந்தியா பிசினஸ் மாநாட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். அதற்கு முந்தைய ஆண்டு, 2015-ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது பெற்றிருந்தார்.
ஜார்கண்ட் மாநில வளர்ச்சி திட்ட குழு மற்றும் ராஜஸ்தான் மாநில பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார்.
இவரின் இழப்பு குறித்து பிரதமர் மோடி, “டாக்டர். பிபேக் டெப்ராய் ஜி ஒரு உயர்ந்த அறிஞராக இருந்தார், பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் மற்றும் பல துறைகளில் நன்கு அறிந்தவர். அவரது படைப்புகள் மூலம், அவர் இந்தியாவின் அறிவுசார் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை பதித்தார். பொதுக் கொள்கையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அப்பால், நமது பழங்கால நூல்களை இளைஞர்கள் அணுகும் வகையில் வேலை செய்வதில் அவர் மகிழ்ச்சி கொண்டார். எனக்கு பல வருடங்களாக டாக்டர் டெப்ராய் தெரியும். அவரது நுண்ணறிவு மற்றும் கல்விச் சொற்பொழிவு மீதான ஆர்வத்தை நான் அன்புடன் நினைவில் கொள்கிறேன். அவரின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.