மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித்பவார், பாராமதி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “எனக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று எனது தாயார் கேட்டுக்கொண்டார். ஆனால் அதனைக் கேட்காமல் அவர்கள் (சரத்பவார்) எனக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தினர். அதற்காக அவர்கள் குடும்பத்தைப் பிரித்தார்கள் என்று அர்த்தமாகிவிடுமா” என்று பேசியிருந்தார்.
அதாவது சரத்பவார்தான் குடும்பத்தைப் பிரித்தார் என்ற ரீதியில் பேசியிருந்தார். இதற்குப் பதிலளித்த சரத்பவார், “அஜித்பவார் கைக்குட்டையால் கண்ணைத் துடைத்துக்கொண்டு உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதைப் பார்க்க முடிகிறது. மக்களவைத் தேர்தலில் சரத்பவார் கண்ணீருடன் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி வாக்கு சேகரிப்பார் என்று அஜித்பவார் பேசினார். ஆனால் இப்போது அவரது (அஜித்பவார்) பேச்சைப் பாருங்கள். நான் குடும்பத்தைப் பிரித்ததாக அஜித்பவார் சொல்கிறார். நான் குடும்பத்தில் மூத்தவர். எனவே எப்போதும் குடும்பம் பிரியக்கூடாது என்றுதான் நினைப்பேன்.

எனது பெற்றோரும், சகோதரர்களும் எனக்குக் குடும்பத்தைப் பிரிக்கக் கற்றுக்கொடுக்கவில்லை. எங்களது கட்சி ஆட்சியிலிருந்தபோது என்னால் எந்த பதவிக்கும் யாரையும் நியமிக்க முடியும் நிலையிலிருந்தேன். அப்படி இருந்தும் எனது மகள் சுப்ரியாவை எந்த பதவியிலும் நியமிக்கவில்லை. அப்போது அஜித்பவாருக்குத்தான் நான்கு முறையும் முதல்வர் பதவியைக் கொடுத்தேன்” என்றார்.
தற்போது பாராமதி தொகுதியில் அஜித்பவாரை எதிர்த்து அவரது சகோதரர் மகன் யுகேந்திர பவாரை சரத்பவார் நிறுத்தி இருக்கிறார். இத்தொகுதி சரத்பவாரின் சொந்த ஊராகும்.
அஜித்பவாருக்கும் சொந்த ஊர். எனவே சொந்த ஊரை யார் தக்க வைத்துக்கொள்வது என்பதில் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து அஜித்பவார் மற்றும் சரத்பவார் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. மக்களவைத் தேர்தலில் அஜித்பவார் மனைவி போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இம்முறை பாராமதியில் போட்டியிடும் அஜித்பவார், தன்னால் அதிக நாட்கள் பாராமதியில் செலவிட முடியாது என்றும், மற்ற பகுதிகளுக்கும் செல்லவேண்டி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

அஜித்பவார் தனது மகன்கள் இரண்டு பேரையும் தேர்தல் பணியில் இறக்கி விட்டு இருக்கிறார். இத்தேர்தல் அஜித்பவார் பவாருக்கு வாழ்வா சாவா போராட்டமாக அமைந்திருக்கிறது. அஜித்பவார் கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்துக்கொண்டு தனியாக வந்தார். அவருக்கு அதிகபட்ச சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித்பவாருக்கு கிடைத்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY