மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு. வெங்கடேசன், மதுரையில் சில நாள்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ. 25,000 நிவாரணத் தொகை வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறிருக்க, தி.மு.க அமைச்சர் பி. மூர்த்தி, “மதுரையில் பெய்த கனமழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மதுரையில் எங்கே பாதிப்புகள் உள்ளன என்பதை எம்.பி சு. வெங்கடேசன் கூறவேண்டும். எதற்காக நிவாரணம் கொடுக்க வேண்டும்?” என்று செய்தியாளர்களிடம் கூறியது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “சமீபத்தில் பெய்த கனமழையால் மதுரை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெருத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, செல்லூர், கட்டபொம்மன் நகர், முல்லை நகர், காந்தி நகர், ஆத்திகுளம், சங்கர் லைன், சத்தியமூர்த்தி நகர் 1-வது, 2-வது குறுக்கு தெருக்கள், செல்லூர் 50 அடி ரோடு, அகிம்சாபுரம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் வீடுகளை விட்டு காலி செய்து சிறுபகுதியினர் முகாமிற்கும், பெரும்பகுதியினர் உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கும் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது.
வெள்ள நீர் வடிந்த பிறகும் கூட, வெள்ளத்தால் ஏற்பட்ட கழிவுகளால் மக்கள் வீடுகளுக்குள் சென்று வாழ்க்கை நடத்த முடியாத அளவிற்கு வெளியில் தங்கியிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிட தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பதும், அதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதும் வழக்கமான ஒன்றாகும். இந்த அடிப்படையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கணக்கெடுத்து தலா ரூ. 25,000 நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக அரசும், முதலமைச்சரும் இதனைப் பரிசீலித்து நிவாரண உதவிகளை அறிவிப்பார்கள் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து பத்திரிகையாளர்கள், அமைச்சர் பி. மூர்த்தியிடம் கேள்வியெழுப்பியபோது ‘எங்கே பாதிப்பு உள்ளது, பாதிப்புகள் குறித்து எம்.பி-யிடமே கேளுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டுள்ள நிலையில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர், எம்.பி-யின் கோரிக்கை குறித்துத் தெரிவித்திருப்பது பொருத்தமற்றதாகும்.

இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து முதலமைச்சர் நிவாரண உதவிகளை அளித்து வந்துள்ள நிலையில், மதுரையில் பாதிக்கப்பட்ட மக்கள் முதல்வரின் அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டுள்ள நிலையில் அமைச்சரின் கருத்து தங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காதோ என்று மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, முதலமைச்சர் மதுரையில் ஏற்பட்ட வெள்ள சேதம், மக்களின் பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தி மக்களது வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் நிவாரணத் தொகையை வழங்கிட தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.” என்று கே. பாலாகிருஷ்ணன் வலியுறுத்தியிருக்கிறார்.