“தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய மாநாட்டில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார்” என்று பேசியுள்ளார். ஆகவே, தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடமளிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகி ஒருவர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சரவணன். இவர்தான், மேற்படி ‘மந்திரி சபையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும்’ என்று முதல்வருக்கு அதிரிபுதிரியான கடிதத்தை அனுப்பி, பரபரக்க வைத்திருக்கிறார். அவர் அனுப்பிய கடிதத்தில்,
“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு. தமிழக முதல்வரும், இந்தியா கூட்டணி கட்சி தமிழக தலைவருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் அவர்களது கட்சி மாநாட்டில் 2026 -ல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசியுள்ளார். ஆகவே, தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.
எனவே, தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே, தமிழக மக்களின் எண்ணத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முனுதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு மாநில நிர்வாகி, ‘மந்திரி சபையில் இடம்’ என்று குறிப்பிட்டு முல்வருக்கு கடிதம் எழுதியிருப்பது பேசுபொருளாகியிருக்கும் சூழலில், அப்படிக் கடிதம் எழுதிய வழக்கறிஞர் சரவணனிடமே பேசினோம்.
“நான் கடிதத்தில் சொல்லியிருக்கும் விசயம் சரியானது தானே?!. இது, நீண்டநாள் யோசனை. என்னோட தனிப்பட்ட கருத்து என்னவென்றால், தோற்கிறோமோ அல்லது ஜெயிக்கிறோமோ காங்கிரஸ் தனித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தான். எங்கள் கட்சி தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு கூட்டணிக் கட்சிகள் மூலம் கிடைக்கும் 5 எம்.பி, 10 எம்.எல்.ஏ-க்கள் போதுமா?. இது சாதாரண தொண்டனாக என்னோட கருத்து. கட்சி தலைமை இந்த கருத்தை சொல்ல தயங்கலாம். என்னோட கருத்தை நான் சொல்லிவிட்டேன். கட்சி தலைமை இப்போதுவரை இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. தனியாக காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கவில்லை என்றால், கூட்டணி தான் என்று தீர்க்கமாக முடிவெடுத்தால், ‘ஆட்சியில் பங்கு’ என்பதையாச்சும் குறைந்தப்பட்சம் கேட்க வேண்டும். வரும் 2026 – ல் இதே கூட்டணி அமைந்து, ஆட்சியமைக்கும் சூழல் வந்தால், அப்போது ஆட்சியில் பங்கு கேட்டால் தப்பில்லை. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்!” என்றார்.
சரவணன் எழுதிய இந்த கடிதம் குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸிடம் பேசினோம்.
“அப்படி கடிதம் எழுதியிருப்பதும், அதில் அவர் குறிப்பிட்டுள்ள விசயமும் அவருடைய தனிப்பட்ட கருத்து. கட்சிக்கு என்று ஒரு கட்டமைப்பு இருக்கிறது. இது பெரிய இயக்கம். அப்படி இருக்கும் போது இதுபோன்று செய்யும்போது கட்சி தலைமையிடம் கலந்தாலோசித்துவிட்டு செய்ய வேண்டும். ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் இப்படி செய்திருப்பது சரியான விசயமாக எனக்கு தெரியவில்லை. மேலிடத்தில் இருந்து சொல்லி அவர் செய்யவில்லை. அவர் தன்னிச்சையாக இப்படி செய்திருக்கிறார். இப்பதான் அவர் கடிதம் எழுதியிருப்பது வெளியில் வந்துள்ளது. இனிமேல் தான் கட்சி தலைமை அவரிடம் இதுபற்றி விளக்கம் கேட்கும். கட்சிக்குள் உள்ள விசயங்கள் பற்றி கருத்து சொல்லலாம். ஆனால், கூட்டணியில் இருக்கும்போது இப்படி கருத்து சொல்வது தவறு. நாளைக்கு கூட்டணி பற்றி பேசும்போது இவர் போய் பேசுவாரா?. கூட்டணி பற்றி முடிவு செய்வது தலைமைதான். இவர் தன்னிச்சையாக இப்படி செய்வது தவறுதான்!” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs