நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியின் வி.சாலையில் இன்று மாலை நடைபெறவிருக்கிறது. அதற்காக நேற்று இரவு முதலே தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல், பல மாநிலங்களிலிருந்தும் அவரது ரசிகர்கள் வந்தபடி இருக்கின்றனர்.

குறிப்பாக இன்று காலை 7.30 மணியிலிருந்து அதிகளவில் குவியும் ரசிகர்களால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மாநாட்டுச் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பார்க்கிங் வளாகம் நிறைந்து விட்டதால், ரசிகர்கள் கிடைக்கும் இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.

அதேபோல, மாநாட்டு வளாகத்துக்குள் குடும்பத்துடன் செல்லும் ரசிகர்கள், வெய்யிலின் தாக்கம் தாங்காமல், அங்குப் போடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளைத் தலைக்கு மேல் போட்டு அமர்ந்திருக்கின்றனர்.
மாநாட்டு மேடைக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் டேங்குகளில் குடிநீர் நிரப்பப்படாததால், ரசிகர்கள் மயக்கமடைந்து வருகின்றனர். இதுவரைக்கும் 20-க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்ததால், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ரசிகர்கள் குவிந்து கொண்டே இருப்பதால், மாநாட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்கின்றனர், விஜய் கட்சி நிர்வாகிகள்.

அதேபோல, வெய்யில் தாங்காமல் மயங்கி விழும் சர்க்கரை நோயாளிகள், மருத்துவ முகாம்களில் ORS பாக்கெட் மற்றும் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். அதையடுத்து தண்ணீர் பாட்டிலுடன் கூடிய சிற்றுண்டி வழங்கப்படும் என்று ஒலிபெருக்கியில் கூறி வருகிறார் புஸ்ஸி ஆனந்த்.