திருமணம் மீறிய உறவு… சந்தேகத்தில் பெண்ணை அடித்துக் கொலை செய்த இளைஞர்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வசித்து வந்த ராணிக்கும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டிலேயே கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர். பின்னர் சுந்தர், ராணியை விவாகரத்து செய்தார்.

அதன் பின்னர் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கதிரேசன் என்பவருடன் ராணி சேர்ந்து வாழ்ந்தார். இதில், ராணிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கதிரேசனும் ராணியை பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த முருகன் எனபவருடன் ராணிக்கு உறவு ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

Murder (representational image)

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட ஆத்திரத்தில் ராணியை முருகன் கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ராணி உயிரிழந்தார். இதையடுத்து முருகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

மணிமுத்தாறு போலீஸார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில், “ராணிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது தனிமையில் சந்திப்பது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இன்னொருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடனான பழக்கத்தை கைவிடும்படி ராணியிடம் கூறினேன். அதைக் கேட்காததால் ஆத்திரத்தில் கொலை செய்தேன்” எனக் கூறியுள்ளார்.