பாராட்டிய ஆளுநர்!
இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. தொடங்கிய முதல் நாளே தலைநகர் சென்னையில் அதிகனமழை வெளுத்து வாங்கியது. மூன்று நாள் மழை பெய்யும் என்று சொல்லப்பட்ட நிலையில் ஒரே ஒருநாள் மட்டுமே மழை பெய்தது. அந்த ஒருநாள் மழைக்கே தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. மழைநீர் வெள்ளம் போலச் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஒரே நாளில் மழை விட்டதன் காரணமாகத் தேங்கிய மழைநீரை மாநகராட்சி அகற்றியது.

இந்நிலையில் சேலத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பருவமழை குறித்து ஆளுநரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய ஆளுநர், “எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. தமிழக அரசு சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அடுத்த இரண்டு தினங்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்குத் தகுந்த அனைத்து முன்னேற்பாடுகளும் அரசு செய்திருக்கிறது. மழை பாதிப்பைத் தமிழக அரசு உரிய முறையில் கையாளும் என்று நம்புகிறேன்” என்று பேசியிருந்தார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
தமிழக அரசும் – ஆளுநரும் எப்போதுமே எலியும் பூனையுமாக இருந்துவரும் நிலையில், ஆளுநர் தமிழக அரசைப் பாராட்டிப் பேசியிருப்பது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. “ஆளுநருக்கு மனமாற்றம் வந்திருக்கிறது. இப்படியே தொடர்ந்து இருந்தால் நன்றாக இருக்கும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆளுநர் பேசியதை வரவேற்றுப் பேசியிருந்தார். தமிழக அரசின் செயல்பாடுகளை எப்போதுமே குற்றச்சாட்டை முன்வைக்கும் ஆளுநரே பாராட்டும் வகையில் தமிழக அரசுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது என்று திமுகவினர் பேசிவந்தனர்.
திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகள் இப்படிப் பேசிக்கொண்டிருக்க, அதிமுக ஆளுநர் பேசியதைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “ஆளுநரும் திமுக அரசும் ஒன்றாகி விட்டனர். நேற்று வரை ஆளுநர் ஒழிக ஒழிக எனக் கூறிவிட்டு இன்று ஆளுநர் வாழ்க எனக் கூறிவருகின்றனர். முதல்வர் பிரதமரைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, அவர் அனுசரித்துப் போகுமாறு கூறியதைக் கேட்டு ஆளுநருடன் இந்த அரசு அனுசரித்துச் செல்கிறது” என்று கடுமையாக விமர்சனத்தை வைத்திருந்தார்.
மறைமுக ஒப்பந்தம்!
ஆளுநருடன் தமிழக அரசைச் சேர்த்துவைத்து அதிமுக முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பேசினோம். “திமுக எப்போதுமே ஒரு சந்தர்ப்பவாத கட்சி. அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கும் தலையாட்டி ஆளுநர் இருந்தால் அவர்களைப் புகழ்வார்கள். அதேநேரத்தில், திமுகவை விமர்சனம் செய்தால் ஆட்டுக்குத் தாடியும் – நாட்டுக்கு ஆளுநரும் என்ற பழைய பழமொழியைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். நடந்து முடிந்த தேநீர் விருந்தில் திமுக புறக்கணிக்கிறது என்று சொன்னது. ஆனால், அரசு சார்பில் அமைச்சர்கள் கூட இல்லை நேரடியாக முதல்வர் பங்கேற்றார். அப்போது திமுக வேறு முதல்வர் ஸ்டாலின் வேறு என்று சொல்ல வருகிறார்களா…

துணை வேந்தர் மாநாடு தொடங்கி பல்வேறு விவகாரத்தில் திமுகவுடன் முரண்பாடிருந்தார் ஆளுநர். அடிக்கடி சர்ச்சை ஏற்பட்டுவந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடியை மாற்றிக் கோவி.செழியனை அமைச்சராகியது திமுக. புதிதாக வந்தவரும் ‘ஆளுநர் உடன் மோதல் போக்கு இல்லாமல் செல்லவிருக்கிறோம்’ என்று பேசுகிறார். உண்மையில் திமுக பின் வாசல் வழியாக பாஜகவுடன் மறைமுக ஒப்பந்தம் போட்டிருப்பது போலவே நடக்கும் அனைத்து சம்பவங்களும் இருக்கின்றன. ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாராட்டு பத்திரம் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது. தங்கள் ஊழல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள என்ன வேண்டுமென்றாலும் செய்ய திமுக ஒருபோதும் தயங்காது. காரணம் திமுகவின் வரலாறு அப்படியானது” என்றார் விரிவாக.
பொறாமையில் பேசுகிறது அதிமுக!
அதிமுகவின் குற்றச்சாட்டு குறித்து திமுகவின் செய்தித் தொடர்பு இணை செயலாளர் சிவ ஜெயராஜிடம் பேசினோம், “மழை பெய்யும் சென்னையில் தண்ணீர் தேங்கும், அதனை வைத்து விமர்சனம் செய்து அரசியல் செய்யலாம் என்று ஆசையோடு காத்திருந்தது அதிமுக. ஆனால், அவர்களின் ஆசை நிராசையாகவே போனது. தளபதி ஸ்டாலின் தலைமையிலான திராவிடமாடல் அரசு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறப்பாகச் செய்து முடிந்திருந்தது. துணை முதல்வர் ஸ்டாலின் முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வு செய்ததைப் பார்க்க முடிந்தது. ஒருநாள் பெருமழை பெய்தாலும், தேங்கிய தண்ணீர் அனைத்துமே வடிந்துவிட்டது. நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் மெட்ரோ பணிகளும், மேம்பாலப் பணிகளும் நடைபெறுவது அனைவரும் அறிந்தது. அந்த பகுதிகளில் மட்டும் தண்ணீர் சிறிது தாமதமாக வடிந்தது. இருந்தபோதிலும் நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டது அரசு.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுக்கும் அவருக்கும் இடையில் எத்தனையோ முட்டல் மோதல்கள் இருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். இருந்தபோதிலும் அவரே தமிழக அரசு மேற்கொண்ட பணிகளைப் பாராட்டியிருக்கக் காரணம் அரசு மேற்கொண்ட பணிகள்தான். பத்து ஆண்டுகளாகச் சென்னையை நாசம் செய்துவிட்டு இப்போது திமுகவைக் குறைசொல்ல அதிமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை. மழை பெய்து நகரமே வெள்ளமானாலும் அதிமுகவினர் ஒருவரை கூட களத்தில் பார்க்க முடியாது. ஆனால், திமுக ஆட்சியில் கொட்டும் மழையில் முதல்வர் நேரடியாக வந்து பணிகளை ஆய்வு செய்கிறார். 72 மணிநேரம் இரவு-பகல் பாராது துணை முதல்வர் களத்தில் நின்று பணிகளை மேற்பார்வையிட்டார். அதோடு, அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை அனைவருமே களத்திலிருந்ததை பார்க்க முடிந்தது. அரசின் செயல்பாடுகளைப் பார்த்து பொறாமையால் அதிமுகவினர் உளறுகிறார்கள்” என்றார் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY