பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் காவல் ஆய்வாளர் தெய்வராணி தலைமையிலான போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த வடமாநில இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது, அவரது பையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் ராஜஸ்தான் மாநிலம், சிரிஹி மாவட்டம், ரெபாரி வஸ்ரம்புராவைச் சேர்ந்த கங்காராம் மகன் கீமாராம் (25) என்பதும், அவர் வைத்திருந்த ரூ.40 லட்சம் ஹவாலா என்பதும் தெரியவந்தது.

அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், “கோவையில் உள்ள என்னுடைய முதலாளி சித்தோடு பகுதியில் நின்றிருந்த ஒரு நபரை சந்தித்து சங்கேத மொழியில், ராஜஸ்தானில் இருந்து வந்ததாகச கூறச் சொன்னார். நானும் அந்த நபரை சித்தோடில் வைத்து சந்தித்தேன. உடனே அவர் வைத்திருந்த பையை என்னிடம் கொடுத்து விட்டுச் சென்றார்” எனக் கூறினார். வந்த நபர் யார்… அவர் யாரிடமிருந்து பணத்தைக் கொண்டு வந்தார் என்பதும் தனக்குத் தெரியாது என்று கீமாராம் போலீஸாரிடம் தெரிவித்தார். பிடிப்பட்டது ஹவாலா பணமாக இருக்கக்கூடும் என்று கருதிய பெருந்துறை போலீஸார், அவரை உடனடியாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் கூறுகையில், “பிடிபட்ட நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது ஹவாலா பணமாக இருக்கக்கூடும் எனத் தெரியவருகிறது. உடனடியாக அந்த நபரை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்து விட்டோம். மற்ற விவரங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையில்தான் தெரியவரும்” என்றார்.