கடந்த ஆகஸ்ட் மாதம், வங்க தேசம் முழுவதும் நடந்த மாணவர் போராட்டத்தால், ஷேக் ஹசீனா பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இந்த நிலையில், இன்று வங்க தேசத்தில் சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம், “முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை கைதுசெய்து, வரும் நவம்பர் 18-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜார்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தை மீறி நடந்துவிட்டு, ஏதேனும் ஒரு சூழலில் ஒருவர் நாட்டிலிருந்து தப்பி வேறு நாட்டிற்கு சென்றுவிட்டால், அவரை ஒப்படைக்கும்படி தஞ்சம் கொடுத்த நாட்டிடம் குறிப்பிட்ட நாடு கேட்கலாம். இப்படியான ஒரு ஒப்பந்தம் இந்தியா – வங்க தேசம் இடையே 2013-ம் ஆண்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் வங்க தேசம் சார்ப்பாக கையெழுத்து இட்டவர் ஷேக் ஹசீனா தான். அதனால், இந்த ஒப்பந்தம் படி, ஷேக் ஹசீனாவை திரும்ப அனுப்பும்படி இந்தியாவிடம் வங்க தேசம் கோரிக்கை வைக்கலாம்.
ஆனால், அதே ஒப்பந்தத்தின் ஒரு பகுதியில், அரசியல் காரணங்களுக்காக ஒருவரை திருப்பி அனுப்பாமல்கூட தஞ்சம் கொடுத்திருக்கும் நாடு கோரிக்கையை தவிர்க்கலாம் என்பது இடம்பெற்றிருக்கிறது.
மேலே கூறியுள்ள இரண்டையும் வைத்து பார்க்கும்போது ஷேக் ஹசீனாவை இந்தியா அனுப்பலாம்… அனுப்பாமல் கூட இருக்கலாம். அது முழுக்க முழுக்க இந்தியாவின் விருப்பமே. ஆனால், ஏற்கெனவே ஷேக் ஹசீனாவிற்கு இந்தியா தஞ்சம் கொடுத்திருப்பது வங்க தேசத்திற்கு பிடிக்காது இருக்கும் நிலையில், இந்தியா அவரை திரும்ப அனுப்பவில்லை எனில், இரு நாடுகளின் உறவும் இன்னும் மோசமடையலாம்.