“பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரை காணவில்லை; மகனை வைத்து போட்டோஷூட் ..” – ஆர்.பி.உதயகுமார் காட்டம்!

“இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாமல்தான் மக்கள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்தியுள்ளனர்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

சென்னை மழை பாதிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உறுப்பினர் அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது “அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள்தான் வடகிழக்கு பருவமழை காலம், இந்த காலத்தில் பெருமழை, பெருவெள்ளம், சூறைகாற்று, புயல் காற்று வீசும். கடந்த ஆண்டு எதிர்கட்சித் தலைவர் எடுத்து சொல்லியும் கூட ‘எத்தனை மில்லி மீட்டர் மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது’ என ஆட்சியில் உள்ளவர்கள் வீர வசனம் பேசினார்கள். ஆனால் சென்னை மூழ்கி போனதை பார்த்தோம், தூத்துக்குடி, திருநெல்வேலியிலும் பாதிப்பு ஏற்பட்டது.

மக்களுக்கு நம்பிக்கை இல்லை…

இப்போது இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் மக்கள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்தியுள்ளதை ஊடகம் மூலம் பார்க்க முடிகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீதும், இந்த அரசின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது. பேச்சளவிலேயேதான் இருப்பார்களே தவிர, செயல் அளவில் இல்லை.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்!

முக்கிய அமைச்சர்களை காணவில்லை…

தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள் நடக்கிறது, அப்பா முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர் இந்த இருவரைத் தவிர வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரை காணவில்லை, மாநகராட்சியை கையில் வைத்திருக்கும் அமைச்சரை காணவில்லை, உள்ளாட்சித்துறை அமைச்சரைக் காணவில்லை.

எனக்கு கிடைத்த புள்ளி விவரங்கள் படி 60 சதவிகித நீர் நிலைகள், கண்மாய்கள், நீர்வழி தடங்கள் தூர்வாரப்படவில்லை, பல இடங்களில் மழை நீர் வடிந்ததாக தெரியவில்லை, மக்களை காப்பாற்ற தயாராக இருக்கிறோம் என்கிறார்கள், எதற்கு தயார் என்றால், மழை வந்தால் ஓடுவதற்குதான்.

பேரிடர் காலங்களில்..

நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவியல் ரீதியாக செயல்படுத்தினோம், மழை வருவதற்கு முன், மழை பெய்து கொண்டிருக்கும்போது, மழை நின்ற பின் என பிரித்து பணிகளை செய்தோம். ஆனால், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என தெரியவில்லை. வெள்ளம் வடிந்த பின் தொற்று நோய் ஏற்படும். அதை தவிர்க்க முகாம்களை நடத்த வேண்டும், அனைத்து அரசுத் துறைகளும் இணைந்து செயல்பட்டால்தான் மக்களை பாதுகாக்க முடியும்.

பேரிடர் காலங்களில் வெற்றி தோல்வி என்பது இல்லை. உயிரிழப்பு இல்லாமல் மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஆர்.பி.உதயகுமார்

போட்டோஷூட் நடத்துகிறார்கள்…

ஐயாயிரம் பேர் தயாராக இருக்கிறோம் என சொல்கிறார்கள். ஆனால், இப்போது முதல்வருக்கும், மகனுக்கும் போட்டோஷூட் மட்டுமே நடத்துகிறார்கள். தேசிய பேரிடர் மீட்பு படையை போல், மாநில பேரிடர் மீட்புப் படையை எங்கள் ஆட்சியில் உருவாக்கினோம். ஆனால் இன்று அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. மக்கள் இப்போது தண்ணீலும், கண்ணீர் கடலிலும் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள்.,

அக்டோபர் மாதம் வந்தாலே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆயத்தம் ஆகிவிட வேண்டும். தேதியை பார்த்துக்கொண்டிருக்க கூடாது. பொதுமக்களுக்கு அரசை நம்பி பிரயோஜனம் இல்லை, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ரிஸ்க் எடுக்க கூடாது, மிக மிக அவசிய தேவை என்றால் மட்டுமே வெளியே வர வேண்டும்.

65 கிலோ மீட்டர் என சொல்வார்கள். ஆனால், 150 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சூறாவளி காற்று வீசும். அது போன்ற நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம். பேரிடர் காலங்களில் சமூக வலைதளங்களில் வதந்திகளையும் வெளியிடுவார்கள். பொதுமக்கள் நம்பக் கூடாது” என்றார்.