‘மழை, கனமழை, மிக கனமழை’ இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய வானிலை நிலவரமாக இருக்கிறது.
வெளுத்து வாங்கும் கனமழை..
வட கிழக்குப் பருவமழைத் தொடங்கிவிட்ட நிலையில் தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை வெள்ளத்தைப் பார்த்திடாத மாவட்டங்களான மதுரை, கோயம்புத்தூர் பகுதிகளில்கூட கனமழை பெய்து முக்கியச் சாலைகள் வெள்ளக் காடாக மாறியிருக்கின்றன. தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களின் வானநிலை நிலவரம் இப்படி இருக்க, தலைநகர் சென்னை என்றால் சொல்லவே தேவையில்லை. சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது. சென்னைக்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..
இந்த ரெட் அலார்ட் சூழலில் கார்கள், வாகனங்கள் வைத்திருப்பவர்கள் வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் தங்களின் கார்களை முன்னெச்சரிக்கையுடன் நிறுத்தி வைத்துள்ளனர். அடுத்த மூன்று நாள்களுக்கு சென்னையில் இடியுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைக் கொடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கையுடன் சென்னை மக்கள் மழையை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர். அரசும் களத்தில் இறங்கி முன் ஏற்படுகளைச் செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் பல ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யபடி அறிவுறுத்தியுள்ளன.
மக்களைப் பாதுகாக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்
இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை (கேப்டன் ஆலயம்) தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை (கேப்டன் ஆலயம்) தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம். சென்னை மட்டுமில்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை என்று வானிலை மையம் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் அதீத கனமழை ரெட் அலர்ட் என்கின்ற செய்தியைத் தொடர்ந்து தொலைக் கட்சிகளில் ஒளிபரப்பாகிறது. அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து இந்த மழைக்காலத்தில் மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

சென்னைக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் அனைத்து மாவட்டங்களிலும் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை உடனடியாக பாதுகாத்து அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து மாத்திரை, அத்தியாவசிய பொருள்கள், என அனைத்தும் தாமதமில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும். முக்கியமாக மலைப் பகுதிகள், தாழ்வான பகுதிகள், குடிசை பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், இருக்கின்ற பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி இந்த மழை வெள்ளம் மக்களை எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான்கு ஆண்டுக்காலம் ஆட்சியில் இருக்கும் திமுக அரசு நான்கு ஆண்டுக் காலமும் மழை வெள்ளம் ஏற்படும் போது 95 சதவீதம் வேலைகள் நிறைவு பெற்று விட்டதாகச் சொல்லும் அரசு இன்றைக்கு வரைக்கும் எந்த வித வேலைகளையும் முடிந்ததாக தெரியவில்லை. மழைநீர் வடிகால் திட்டமோ, மெட்ரோ திட்டமோ இன்று வரை நூறு சதவீதம் முடியவில்லை. எனவே சாலையில் செல்பவர்கள், இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏற்கெனவே மூன்று உயிர்கள் மழை தேங்கி இருக்கும் குழியில் விழுந்து இறந்ததாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றது.
மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை (கேப்டன் ஆலயம்) தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் – 15.10.2024#DMDK #captainvijayakanth #PremalathaVijayakanth #ChennaiRains pic.twitter.com/nkeEGQxPQh
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) October 15, 2024
“இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே”
மின்சார துறையையும் இந்த அரசு உடனடியாக துரித பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். எங்கெல்லாம் மின் வெட்டு பாதிப்பு, மின் கம்பங்கள் சாய்வதும், உயர் மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுவதையும் உடனடியாக கண்காணித்து மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
மக்களுக்குத் தேவையான இடவசதி, மருத்துவ வசதி, என அனைத்தையும் தயார் நிலையில் வைத்து மழைக் காலத்தில் மக்களைக் காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் மழை நீரால் பாதிக்கப் பட்டவர்கள் தேமுதிக அலுவலகத்தை (கேப்டன் ஆலயம்) நீங்கள் தங்க பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய உணவுகள் அங்கு வழங்கப்படும்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர்கள் இருக்கும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவியை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்ற நமது தலைவரின் கொள்கை படி நம்மால் இயன்ற உதவியை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து உதவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.