`நிலத்தை அளக்க ரூ.10,000 லஞ்சம் வேணும்’ – விவசாயியிடம் பேரம் பேசிய அளவையர் கைது!

திருப்பூர் மாவட்டம், பங்களா ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அவிநாசி அருகே சேவூரில் உள்ள தனது நிலத்தைப் பத்திரப் பதிவு செய்ய ஏதுவாக அளந்து தருமாறு நில அளவையர் காளிமுத்துவை அணுகி உள்ளார். நிலத்தை அளந்து தர மணிகண்டனிடம் காளிமுத்து ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மணிகண்டன் லஞ்சம் கொடுக்க மறுக்கவே பல்வேறு காரணங்களைக் கூறி அவரது நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் காளிமுத்து தவிர்த்து வந்துள்ளார்.

காளிமுத்து

லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்களது ஏற்பாட்டின்பேரில், ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் லஞ்ச பணத்தை நில அளவையர் காளிமுத்துவிடம் மணிகண்டன் திங்கள்கிழமை கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் நில அளவையர் காளிமுத்துவை கைது செய்தனர்.