கோவை சித்தாப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பத்திரப்பதிவுக்காக வெள்ளலூரில் அமைந்துள்ள சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளார். அங்கு அவரிடம் ரூ.35,000 லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்துள்ளார்.

அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கருப்பசாமியிடம், ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்துடன் அவர் சிங்காநல்லூர் பத்திரப்பதிவு அலுவலகம் சென்றுள்ளார்.
இளநிலை உதவியாளர் பூபதி ராஜா மற்றும் சார்பதிவாளர் நான்சி நித்யா கரோலின் ஆகியோர் லஞ்சப் பணத்தை வாங்கியுள்ளனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

நான்சி மீது பல்வேறு புகார்கள் இருப்பதால் போலீஸார் தொடர்ந்து அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தியுள்ளனர். நேற்று, நேற்று முன்தினம் ஆகிய இரண்டு நாள்கள் போலீஸ் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.
நான்சியின் காரில் சோதனையிட்டபோது, அதில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் இருப்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், நான்சி மற்றும் பூபதி ராஜா மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.

நான்சி மீது பல்வேறு புகார் எழுந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கு சோதனை நடத்தியுள்ளனர். அப்போது நான்சி தப்பித்துவிட்டார். இந்தமுறை அவர் வசமாக சிக்கிவிட்டார்.