`போதைப்பொருள்’ பிரச்னையைக் கையிலெடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி – கொதிக்கும் ஆளும் தரப்பு… பின்னணி என்ன?

பறிமுதல் செய்வதில்லை!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “அதிகரித்து வரும் போதை பயன்பாடு பழக்கவழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிவதை நேரில் பார்க்கிறேன். இந்தச் சமூகமும் சீரழிவைச் சந்தித்து வருகிறது. தற்போது உள்ள காலகட்டத்தில் போதைப்பொருள்கள் நிறைய வடிவங்களில் சந்தையில் ஊடுருவியுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பள்ளி-கல்லூரி மாணவர்கள்தான். போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தங்களின் சுயத்தை இழந்து சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபடுவதில் ஆரம்பித்து பெரிய பெரிய குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

கெமிக்கல், சிந்தெட்டிக் போதைப்பொருள் ஒருபக்கம் என்றால் தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இந்த கஞ்சா புழக்கத்தை முற்றிலுமாக தமிழகத்திலிருந்து ஒழிக்க வேண்டும். மத்திய புலனாய்வு அமைப்புகள் நூற்றுக்கணக்கான டன் அளவில் கெமிக்கல் மற்றும் சிந்தெட்டிக் போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்கின்றன.

ஆளுநர் ஆர்.என்.ரவி

நான் பொறுப்பேற்றது முதல், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் என காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டேன். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருக்கிறது. மத்திய புலனாய்வு அமைப்புகள் சிந்தெட்டிக் மற்றும் கெமிக்கல் போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்வதுபோல தமிழ்நாடு அரசால் ஏன் கஞ்சாவைப் பறிமுதல் செய்ய முடிவதில்லை. இதற்கான காரணம்தான் என்ன… சர்வதேச அளவிலான கடத்தல் கும்பல்கள், போதைப்பொருள்களை விநியோகம் செய்வதன் மூலம் பில்லியன் கணக்கில் பணம் சம்பாதிக்கின்றன. போதைப்பொருள் விநியோகம் செய்து சம்பாதிக்கும் பணத்தின் மூலமாகத் தீவிரவாதத்தை வளர்க்கின்றனர். நாடுமுழுவதும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போதைக்கு எதிராகப் பெரிய இயக்கமாக இயங்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வுகளில் பங்கெடுக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.

`பச்சைப் பொய் பேசுகிறார் ஆளுநர்!’

ஆளுநரின் குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “அபாண்டமான குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கும் ஆளுநருக்கு எனது கடும் கண்டனம். ஆளுநர் மாளிகைக்குள்ளும், வெளியிலும் அரசியல் பேசுவதையும், அவதூறு பரப்புவதையும் ஆளுநர் பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகே போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. எங்கள் முதல்வரே முன்னின்று போதையில்லா தமிழகத்தை உருவாக்கப் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறார்.

முதன்முறையாகப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கான மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மூன்று ஆண்டுக்கால ஆட்சியின் தொடர் தீவிர நடவடிக்கை காரணமாகப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. அரசு நடவடிக்கைகள் குறித்துத் தெரியாமல் பாஜக மேடையில் நிற்பவராக மாறி பச்சைப் பொய்கள் பேசுவது வெட்கக்கேடானது.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே ஆளுநர் பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார் என்பது தெரிகிறது. ஆளுநர் முழுநேர அரசியல்வாதியாக இருப்பதால் நிர்வாகத்தில் நடப்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிமுக ஆட்சியில் அமைச்சர்களே குட்கா விற்பனைக்குத் துணை போனதுடன் வழக்கிலும் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் மீதான வழக்குகளுக்கு அனுமதி கேட்டுக் கொடுக்கப்பட்ட கோப்புகள் ஒருவருடத்துக்கும் மேலாகக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் ஆளுநர்.

இப்போது போதைப்பொருள் ஒழிப்பு குறித்து வாய்கிழியப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அதைவிட, திமுக அரசின் நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்திப் பேசும் தார்மீக உரிமை ஆளுநருக்கு இருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன். நாடு முழுவதும் பாஜக நிர்வாகிகள் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்குகிறார்கள். போதைப்பொருள்களின் தலைநகர் குஜராத் குறித்தெல்லாம் ஏன் பேசுவதில்லை” என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

42,337 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஆளுநர், மத்திய புலனாய்வு அமைப்புகள் சிந்தெட்டிக் போதைப்பொருள்களைக் கைப்பற்றுவதுபோல தமிழக அரசு கஞ்சா வகை போதைப்பொருள்களை ஏன் கைப்பற்றுவதில்லை என்ற கேள்வியை முன்வைத்திருந்தார். போதைப்பொருள் ஒழிப்பு விவகாரத்தில் தமிழகக் காவல்துறை முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழகக் காவல்துறை மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்பதை இந்த அரசு ஆட்சிக்கு வந்ததுமே செயல்படுத்தியது. இப்போது அதன் 4.0 வெர்ஷன் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் கஞ்சா மட்டுமன்றி எந்த வகை போதைப்பொருள் உள்ளே நுழைந்தாலும் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பாகவே அதனைக் கைப்பற்றுகிறது காவல்துறை. தமிழகத்துக்கு வேறு மாநிலங்களிலிருந்து உள்ளே வருவதை அறிந்து எங்கிருந்து பொருள் அனுப்பப்படுகிறதோ அந்த மாநிலங்களுக்குச் சென்று போதைப்பொருளைத் தயாரிப்பவர்கள், விற்பவர்கள் என அனைவரையும் கைது செய்து தமிழகம் அழைத்து வந்திருக்கிறோம்.

கஞ்சா

கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டில் மட்டும், 22,447 குற்றவாளிகள்மீது 16,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களிடமிருந்து 42,337 கிலோ கஞ்சா, 1.234 கிலோ ஹெராயின், 74,412 போதை மாத்திரைகளுடன் கூடுதலாக 223 கிலோ அழிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒன்பது மாதத்தில் மட்டும் தமிழகத்தில், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் 12,800 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து அழித்திருக்கிறார்கள். காவல்துறையினர் இரவு பகலாக அலைந்து திரிந்து இந்தளவுக்கு நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள். ஆனால், ஆளுநர் நடவடிக்கைகள் இல்லை என்கிறார்கள். நாங்கள் மேலே சொல்லியுள்ள பறிமுதல் அளவிலேயே காவல்துறையின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ளலாம்” என்றார்கள் விரிவாக.