தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் தனியார் மண்டபத்தில் இன்று (அக்டோபர் 7) நடைபெற்றது. இதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை வரவேற்று, ‘வருங்கால முதல்வரே’, ‘முடி சூடா மன்னரே’, ‘அரசியலில் நேர்மையே’ போன்ற வாசகங்களுடன் ப்ளக்ஸ் பேனர்களை அக்கட்சியினர் வைத்திருந்தனர்.
நாட்டியக் குதிரைகள், கதகளி நடனம், முளைப்பாரி என ஊர்வலமாக வந்து தினகரனுக்கு வரவேற்பளித்தனர். மண்டபம் முழுவதையும் பவுன்சர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். மேடையில் பேசிய நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடினர்.
கூட்டம் முடிந்ததும் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “சென்னையில் நடந்த விமானப் படை சாகச நிகழ்ச்சியைக் காண, 10 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வந்த நிலையில், ஐந்து பேர் இறந்துள்ளனர். இவ்வளவு மக்கள் கூடும் நிலையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். இது முதல்வரின் கவனக் குறைவு என்று கூறுவதா? அல்லது அவரது கவனத்திற்குச் செல்லவில்லை எனக் கூறுவதா? போலீஸார் மீது குற்றம் சொல்வதா? விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் இது போன்ற நிகழ்வுகள் குறித்து என்ன கூறுவது? இதற்கு முழு பொறுப்பையும் முதல்வர் தான் ஏற்க வேண்டும்.
இந்த விஷயத்தை நாங்கள் அரசியலாக்கவில்லை. கும்பகோணம் மகாமக குளத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குளிக்க வந்த பொழுது ஏற்பட்ட விபத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று அரசியல் ஆக்கியது தி.மு.க., தான். இவர்கள் செய்யும் தவறுகளையும், தி.மு.க., நிர்வாகிகள் ஈடுபடுகின்ற போதை மருந்து கடத்தலையும், போதை மருந்து விற்பனை பற்றியும் கூறினால் அது அரசியலாம். முதல்வருக்கும் அவரது குடும்பத்திற்கும் மட்டுமே பாதுகாப்பு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வழிப்பறி, கொலை போன்றவை அதிகமாவதற்குக் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கம்தான் காரணம்.
இதையெல்லாம் இந்த அரசு கட்டுப்படுத்தத் தவறியதால், பொதுமக்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. கூலிப்படைகள் மூலம் நடக்கும் கொலைகள் தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. தமிழகம் போதைப் பொருளின் ‘ஹப்’ ஆக மாறிவிட்டது. சட்டம் ஒழுங்குச் சீர்கெட்டு வருகிறது எனத் தமிழக ஆளுநர் ரவி கூறியிருப்பது தவறில்லை. அ.தி.மு.க., ஜெயலலிதாவின் இயக்கம். பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அந்த இயக்கம் வந்தவுடன், ஜெயலலிதாவின் கொள்கை வழியிலிருந்து மாறி விட்டது. இதனால்தான் அ.ம.மு.க., என்ற இயக்கம் உருவானது.
தி.மு.க., என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும் என்றால், ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பழனிசாமியிடம் இரட்டை இலை இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகக் கண்ணை மூடிக்கொண்டு காவடி தூக்குபவர்கள், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள். அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். பழனிசாமியிடம் இருந்த கோபத்தின் காரணமாக தி.மு.க-விற்கு மக்கள் வாக்களித்தார்கள். அ.ம.மு.க., மக்களோடு மக்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் ஆதரவுடனும், கூட்டணி பலத்துடனும் தி.மு.க-வை அ.ம.மு.க., வீழ்த்தும்.
தி.மு.க.,வுக்கு உதவியாக பீ-டீமாக இருக்கிற பழனிசாமியையும் வீழ்த்துகிற காலம் 2026ல் வரும். தன் மீது கொடநாடு கொலை வழக்கு, தன்னுடைய ஆட்சியில் செய்த முறைகேடுகளுக்கு வழக்கு போன்றவை வந்துவிடக்கூடாது என்பதற்காக பழனிசாமி தி.மு.க-வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அ.தி.மு.க., தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறுவதால், அவர்களை அச்சப்படுத்தும் விதமாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY