`உதயநிதியை துணை முதலமைச்சராக்கியதால் துரைமுருகன் குழப்பத்தில் உள்ளார்’ – ஆர்.பி.உதயகுமார்

“வாரிசு அரசியலை எளிதாக கடந்து போய்விட முடியாது, தனி மெஜாரிட்டியாக திமுக உள்ளதால் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

ஆர்.பி. உதயகுமார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “கழகப் பணி, மக்கள் பணிகளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திட வேண்டும், மக்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் நாம் போராட வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினரை அதிக அளவில் ஈடுபடுத்திட வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம், பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்காக மாபெரும் சட்டப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டவர் ஜெயலலிதா. அதற்காக விவசாயிகள் திரண்டு மதுரையில் பாராட்டு விழா நடத்தினார்கள்.

கேரளா அரசு, அணை பலமில்லை என்ற தவறான செய்தியை பரப்பி வருகிறது. ஆனால், வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதாக கூறி வருகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், ஸ்டாலின் ஆட்சியில் மூன்று ஆண்டுக்காலமாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள முதலமைச்சர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர், ஆனால், தமிழக முதலமைச்சர் எந்த விளக்கமும் சொல்லவில்லை.

துரைமுருகன்

முல்லைப்பெரியாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக வருகின்ற 9-ஆம் தேதி மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுவரை மௌன விரதமிருந்த அமைச்சர் துரைமுருகன் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்களை நாங்கள் குழப்புகிறோம் என்றும், விளம்பரத்தை தேடுகிறோம் என்றும் கூறுகிறார். இது விளம்பரத்துக்கான போராட்டம் அல்ல, ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றும் போராட்டமாகும். அவர்களின் உரிமையை காக்கும் போராட்டமாகும்.

பாதிக்கப்படும் விவசாயிகள் குறித்து இதுவரை முதலமைச்சர் எந்த பதிலும் சொல்லவில்லை, ஆனால் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் உண்ணாவிரதம் அறிவித்துள்ளதாக துரைமுருகன் கூறுகிறார். உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கிவிட்டனர் என்ற குழப்பத்தில் நிதானம் இல்லாமல் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மகன் வயதுள்ள ஸ்டாலின் முதலமைச்சராகிவிட்டார், பேரன் வயதுள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிட்டார் என்பதால், துரைமுருகன் மிகவும் குழப்பத்தில் உள்ளார்.

நாங்கள் மக்களுக்காக போராடி வருகிறோம், இதுபோன்ற மக்கள் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்போம். இது டிரெய்லர்தான், மெயின் பிக்சர் இனிமேல்தான் வர உள்ளது. டிரெய்லருக்கே நீங்கள் ஆடிப் போய் உள்ளீர்கள்.

கூட்டத்தில் ஆர்.பி உதயகுமார்

நடிகர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர், நாளைக்கு முதலமைச்சர் என்று உதயநிதி வளர்ந்து கொண்டிருக்கிறார். இதைக் கண்டு உங்கள் இதயம் தாங்கவில்லை.

வாரிசு அரசியலை எளிதாக கடந்து போய்விட முடியாது, தனி மெஜாரிட்டியாக திமுக உள்ளதால் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

கிணற்றைக் காணோம் என்று திரைப்படத்தில் வடிவேலு சொல்வது போல இன்றைக்கு அலங்காநல்லூர் பகுதியில் மலைகளைக் காணோம், கனிம வளங்கள் எங்கே போகிறது?  மக்கள் சேவையாற்ற அரசு கவனம் செலுத்தவில்லை.  அவர்களுக்கெல்லாம் கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் என்ற நிலைதான் உள்ளது. இந்த பிரச்னை தீர வேண்டுமென்றால் 2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும்” என்று பேசினார்.