தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம் அருகே உள்ள பத்துக்காடுவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் சின்னகுழந்தை, வயது 49. இவரின் மனைவி ஜோதி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலை செய்து வந்த சின்னகுழந்தை விடுமுறையில் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தவர் திரும்பி செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி சின்னகுழந்தை, தன் மனைவி ஜோதியிடம் பட்டுக்கோட்டை வரை சென்று விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் தனது கணவரை காணவில்லை என ஜோதி கடந்த 25-ம் தேதி திருவோணம் போலீஸில் புகார் அளித்தார். அப்போது, கணவர் ஐந்தரை பவுன் செயின், ஒன்றை பவுன் மோதிரம் அணிந்திருந்ததுடன், ரூ 1.20 லட்சம் கையில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். இதன்பேரில் திருவோணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் சின்னகுழந்தை, பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 57 வயது பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் மகளின் கணவரான விஜயகுமாருக்கு இது பிடிக்கவில்லை. மேலும் சின்னகுழந்தை, அப்பெண்ணின் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்து வந்துள்ளார். இதனால் தன் மாமியார் தன்னை மதிக்கவில்லை என்ற கோபம் விஜயகுமாருக்கு இருந்துள்ளது. இந்நிலையில் சின்னகுழந்தை காணாமல் போனது குறித்து விஜயகுமாரிடம் விசாரணை செய்துள்ளனர். இதில் திடுக்கிடும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், `57 வயது பெண்ணுக்கும், சின்னகுழந்தைக்கும் இருந்த திருமணம் மீறிய உறவு விஜயகுமாருக்கு பிடிக்கவில்லை. விஜயகுமாருக்கும் அவரது மனைவியான அப்பெண்ணின் மகளுக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் விஜயகுமாரை அப்பெண் மதிக்காமல் நடந்துள்ளார். சின்னகுழந்தை உங்களுக்கு பணம் கொடுத்து உதவுவதால் நீங்கள் என்னை மதிப்பதில்லை என ஏற்கனவே விஜயகுமார் தனது மாமியாருடன் வாக்கு வாதம் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி சின்ன குழந்தை, விஜயகுமாரின் மாமியாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் இல்லை விஜயகுமார் மட்டுமே இருந்துள்ளார். அப்போது விஜயகுமார், சின்ன குழந்தையிடம், `என்னோட மாமியாருக்கு செய்றதுக்கு நீ யார், நீ நடந்து கொள்வது எனக்கு பிடிக்கவில்லை’னு சொல்லியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விஜயகுமார், சின்ன குழந்தையை கட்டையால் அடிக்க சம்பவ இடத்திலேயே சின்னகுழந்தை இறந்து விட்டார்.
அத்துடன் போலீஸில் மாட்டாமல் தப்பிக்க நினைத்த விஜயகுமார், சின்னகுழந்தை உடலை, வீட்டின் பின்புறத்தில் உள்ள செப்டிக் டேங்கில் போட்டு மூடி விட்டார். அதன் பின்னர் எதுவும் நடக்காதது போல் விஜயகுமார் இருந்துள்ளார். போலீஸ் விசாரணையின் போது கூட பதட்டமே இல்லாமல் தனக்கு எதுவும் தெரியாது என்றே சொல்லி வந்தார். பின்னர், போலீஸாரின் தீவிர விசாரணைக்கு பிறகே கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இதையடுத்து அழுகி போயிருந்த சின்னகுழந்தை உலை மீட்டதுடன் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்ததாக’ தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88