டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் (Niti Aayog) கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தவிர, எதிர்க்கட்சிகள் ஆளும் மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்துவிட்டனர்.

பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜியும் தான் பேசுகையில் மைக்கை அணைத்து அவமானப்படுத்தியாக பாதியிலேயே வெளியேறிவிட்டார். இந்த நிலையில், மம்தா பானர்ஜி பொய் கதை சொல்கிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்திருக்கிறார்.

இதுகுறித்து ஊடகத்திடம் பேசிய நிர்மலா சீதாராமன், “நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அவர் பேசியதை நாங்கள் அனைவரும் கேட்டோம். ஒவ்வொரு முதலமைச்சருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொருவரின் மேசையின் முன்பும் இருந்த திரையில் நேரம் காட்டப்பட்டது.
ஆனால், தனது மைக் அணைக்கப்பட்டது என்று ஊடகங்களில் அவர் கூறியிருக்கிறார். அது முற்றிலும் பொய்யானது. ஒவ்வொரு முதலமைச்சருக்குமே பேச நேரம் கொடுக்கப்பட்டது. தனது மைக் அணைக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறியிருப்பது துரதிஷ்டவசமானது. இது உண்மையல்ல. பொய்யை வைத்துக் கட்டுக்கதை அளக்காமல், இதன் பின்னணியில் இருக்கும் உண்மையை அவர் பேச வேண்டும்” என்றார்.
It is being claimed that the microphone of CM, West Bengal was switched off during the 9th Governing Council Meeting of NITI Aayog#PIBFactCheck
▶️ This claim is #Misleading
▶️ The clock only showed that her speaking time was over. Even the bell was not rung to mark it pic.twitter.com/P4N3oSOhBk
— PIB Fact Check (@PIBFactCheck) July 27, 2024
மேலும், PIB உண்மை சரிபார்ப்பு X சமூக வலைதளப் பக்கத்தில், “நிதி ஆயோக்கின் 9-வது ஆட்சிக்குழு கூட்டத்தின்போது மேற்கு வங்க முதல்வரின் மைக் அணைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூற்று தவறானது. அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது என்பதை மட்டுமே கடிகாரம் காட்டியது. அதைக் குறிப்பிடும் வகையில் மணி கூட அடிக்கப்படவில்லை” என்று ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.