மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாடு என்ற வார்த்தை உட்பட, தமிழ்நாட்டின் கோரிக்கை எதுவும் இடம்பெறாததால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என முதல்வர் ஸ்டாலின் திங்களன்று அறிவித்தார். இவரோடு, கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மாநில முதல்வர்களும் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர். இந்த நிலையில், டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியிருக்கும் சூழலில் பாஜக மத்திய அரசை விமர்சித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் ஒன்றிய பா.ஜ.க அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா ஒன்றிய அரசுகளும்கூட அப்படித்தான் இருந்தன. இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள். அதற்கு அடையாளம்தான், கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பா.ஜ.க-வைப் புறக்கணித்த மாநிலங்களை, அந்த மாநில மக்களைப் பழிவாங்குகிற பட்ஜெட்டாகத்தான் நிதியமைச்சர் தாக்கல்செய்த பட்ஜெட் அமைந்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால், அவர் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது. ஒன்றிய பா.ஜ.க அரசானது, தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்துக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு என்று அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டம் என்றால், அது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைதான். ஆனால், அதுவும் பத்தாண்டுகள் ஆகியும் என்ன நிலைமையில் இருக்கிறதென உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
தமிழ்நாட்டுக்கென எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை. பா.ஜ.க திருந்தியிருக்கும் என நினைத்தேன். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. பட்ஜெட்டுக்கு இரண்டு நாளுக்கு முன்பு கூட, தமிழ்நாட்டுக்கான தேவைகள் என்னவென்று சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஆனால், அதில் இருந்து ஒன்றைக்கூட நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை. அவ்வளவு ஏன்… ‘தமிழ்நாடு’ என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. இவ்வளவு ஆண்டுகளாகச் சும்மா ஒப்புக்காகவாவது ஒரு திருக்குறளைச் சொல்லி, பட்ஜெட் வாசிப்பார்கள்… இந்த முறை திருவள்ளுவரும் கசந்துவிட்டார் போல.
இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்தது, சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதி. 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலேயே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவசரமாக வந்து அடிக்கல் நாட்டிய திட்டம் அது. `தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இணைந்து, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்’ என்று 2021-ம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்தார்கள். ஆனால், இப்போது தமிழ்நாடு அரசுதான் இந்தத் திட்டப்பணிகளை முடுக்கிவிட்டுச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசோ, தன்னோட பங்காக ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல், வேண்டுமென்றே மூன்று ஆண்டுகளாகக் காலம் தாழ்த்திக் கொண்டு இருக்கிறது.

கேட்டால், ‘இது மாநில அரசின் திட்டம்’ என நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்கிறார்கள். அப்படியென்றால், ரயில்வே துறையை மாநில அரசுக்குக் கொடுத்துவிடுவீர்களா? கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பதைப் பற்றி மூச்சே விடவில்லை. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இதே ஒன்றிய அரசு, நமது நகரங்களைவிடப் பல சிறிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து நிதி உதவியும் வாரி வழங்கியிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்? இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால், தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர்.
இது எல்லாவற்றையும் விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் வகையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ திட்டத்தின்கீழ், வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளார்கள். தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது ஒன்றிய அரசு. மாணவ மாணவிகளின் கல்வி பாழாகுமே… அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலைகூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பா.ஜ.க அரசு இருக்கிறது.

அடுத்து, பட்ஜெட் உரையில் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்கள், மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்போம் என மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே பட்ஜெட்டில் அறிவிக்கிறார் நிதியமைச்சர். ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்து, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையை எடுத்துக்கொண்டார்கள். ஜி.எஸ்.டி-யால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கான 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டையே இன்னும் அளிக்காத இந்த ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது?

கடந்த பத்தாண்டுகளாக வருமானச் வரிச்சலுகை இன்றித் தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, வெறும் 17,500 ரூபாய் சலுகையை மட்டும் வழங்கி, அந்தச் சலுகையும் பெரும்பான்மையோருக்குக் கிடைக்காமல் செய்துகொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த ஒன்றிய அரசு. இது ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட். ஒன்றிய அரசுக்கு ஒன்று சொல்கிறேன்… மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பது போல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது. இதற்கு பா.ஜ.க பதில் சொல்லியே தீர வேண்டும்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.