11 ஆண்டுகளில் 96,000 வழக்குகள்… உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற தமிழக நீதிபதி ஆர்.மகாதேவன்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரையின்படி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.மகாதேவன் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த நோங்மெய்கபம் கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் இன்று பதிவியேற்றனர். இதில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிவந்த நோங்மெய்கபம் கோடீஸ்வர் சிங், மணிப்பூரிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் முதல் நபராவார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நோங்மெய்கபம் கோட்டீஸ்வர் சிங் – ஆர்.மகாதேவன்

அதேபோல ஆர்.மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கையில் தமிழக நீதிபதிகளின் இரண்டாக உயர்ந்திருக்கிறது. ஏற்கெனவே, தமிழகத்தைச் சேர்ந்த கே.வி.விஸ்வநாதன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தற்போது பதவியில் இருக்கிறார்.

சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த நீதிபதி ஆர்.மகாதேவன், 1963-ல் ஜூன் 10-ம் தேதி பிறந்தார். மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றிருக்கும் இவர் 1989-ல் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகத் தன்னைப் பதிவு செய்துகொண்டார். அதையடுத்து 24 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய ஆர்.மகாதேவன், சிவில், கிரிமினல் வழக்குகள், மறைமுக வரிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய கலால் தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவராகத் தன்னை மெருகேற்றிக்கொண்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்

இந்தக் காலகட்டங்களில் தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞர் (வரி), மத்திய அரசின் கூடுதல் நிலை வழக்கறிஞர், இந்திய அரசின் மூத்த குழு வழக்கறிஞர் என வழக்கறிஞராக மட்டும் 9,000-க்கும் மேற்பட்ட வழக்குகளில் வாதாடினார். இவ்வாறு தனது சட்டப் பணியில் சிறப்பாகப் பணியாற்றியதன் மூலம், 2013 அக்டோபர் 25-ல் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2015, ஏப்ரல் 14-ல் சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியானார்.

அன்று முதல் தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாகப் பணியாற்றிய ஆர்.மகாதேவன், இந்த ஆண்டு மே 24-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதில், 2013 முதல் 11 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக 96,000-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தீர்த்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு தலைமை தாங்கியபோது, ​​6,000-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தீர்த்து வைத்தார். இவர், 2021-ல் ஒரு வழக்கில் யுனெஸ்கோவால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்ட பழங்கால நினைவுச்சின்னங்கள், கோயில்கள் மற்றும் பாரம்பரிய இடங்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்

அதோடு, சிலை திருட்டு வழக்குகளில் நீதிபதி பி.டி.ஆதிகேசவலுவுடன் சிறப்பு டிவிஷன் பெஞ்ச் தலைமை தாங்கி, வெளிநாடுகளுக்கு திருடுபோன சிலைகளை மீட்க அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதுமட்டுமல்லாமல், திருக்குறளை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்த்து நன்னெறி போதிக்க வலியுறுத்தியது என இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. இவை தவிர, சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு உட்பட பல்வேறு கமிட்டிகளுக்கு இவர் தலைமை தாங்கியிருக்கிறார். இந்த நிலையில், இவரின் சட்டப் பணிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதிவு உயர்வு பெற்றிருக்கிறார். இவர் 2028, ஜூன் 9-ம் தேதிவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதிவியில் இருப்பார். ஆர்.மகாதேவன் சட்டப்பணி மட்டுமல்லாது தமிழ் இலக்கியங்களிலும் ஆர்வமிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.