ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த M.R.விஜயபாஸ்கர்… கேரள எல்லையில் கைதுசெய்த CBCID!

கரூர், குப்புச்சிப்பாளையம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பிரகாஷ். இவர், தோரணக்கல்பட்டியிலுள்ள தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி போலி ஆவணங்கள் கொடுத்து தனது ஆதரவாளர்களின் பெயர்களில் பத்திர பதிவு செய்துவிட்டதாக, கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி புகார் கொடுத்திருந்தார். அதேபோல், மேலக்கரூர் சார்பதிவாளர் ( பொறுப்பு) முகமது அப்துல் காதரும் கரூர் நகர காவல் நிலையத்தில், பிரகாஷ் வழங்கிய புகாரைப் போலவே, போலியாக ஆவணங்கள் கொடுத்து பத்திரப் பதிவு செய்தவர்கள் மீதும், அதனையொட்டி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு ஒன்றை வழங்கினார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இதில், சார்பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில், பிரவீன், யுவராஜ், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் உள்ளிட்ட ஏழு பேர்மீது எட்டு பிரிவுகளின் கீழ், கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதனிடையே, முதலில் புகார் கொடுத்த பிரகாஷ் வாங்கல் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதால், அவர் கொடுத்த புகார் அடிப்படையில் வாங்கல் காவல் நிலையத்தில் மேற்படி ஏழு நபர்கள் மற்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இதற்கிடையில், இந்த வழக்கு கடந்த 14-ம் தேதி சி.பி.சி.ஐ.டி -க்கு மாற்றப்பட்டது. இதையறிந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் தலைமறைவானார்கள். ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அவர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர். திண்டுக்கல், கேரளா மற்றும் வட மாநிலங்கள் என்று பல இடங்களில் அவர் பதுங்கி இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கெல்லாம் அவரைத் தேடி சி.பி.சி.ஐ.டி போலீஸார் பயணித்தனர். மேலும், கரூரில் உள்ள அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் இரண்டு முறை சி.பி.சி.ஐ.டி போலீஸார் சோதனை நடத்தினர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

இன்னொருபக்கம், முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு தாக்கல் செய்த மனு மூன்று முறை தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தது. இத்தகைய சூழலில், எம்.ஆர்.விஜயபாஸ்கரைத் தேடி கேரளம் விரைந்த தனிப்படை போலீஸார் கேரள எல்லையில் பதுங்கியிருந்த அவரை கைது கைதுசெய்திருக்கின்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான கைது நடவடிக்கை கரூர் பகுதிகளில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88