ஆம்ஸ்ட்ராங் கொலை: முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை; அதிகாலையில் நடந்தது என்ன?!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5-ம் தேதி இரவு பெரம்பூரில் அவரது வீட்டருகே ஆறு மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். அதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட11 பேரை செம்பியம் போலீஸர் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 11 பேரில் ஒருவர் ரௌடி திருவேங்கடம். குன்றத்தூர் பெரியார் நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்த இவருக்கு 33 வயதாகிறது.

ஆம்ஸ்ட்ராங்

இவ்வாறிருக்க, போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட திருவேங்கடம் பரங்கிமலை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சரவணன் விசாரணைக்காக மாதவரம் ஆடுத்தொட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது ரௌடி திருவேங்கடம் தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான போலீஸார் மாதவரம் ஆடுத்தொட்டியைச் சுற்றியுள்ள பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர், புழல் வெஜிட்டேரியன் வில்லேஜ் பகுதியிலுள்ள காலி இடத்தில் ஒரு தகரக் கொட்டகையில் ரௌடி திருவேங்கடம் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

ரவுடி திருவேங்கடம்

இதையடுத்து தனிப்படை போலீஸார் தகரக் கொட்டகையைச் சுற்றி வளைத்து திருவேங்கடத்தைப் பிடிக்க முயன்றனர். அப்போது திருவேங்கடம் தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து ஆய்வாளர் முகமது புகாரி தற்காப்புக்காகத் திருவேங்கடத்தை துப்பாக்கியால் சுட்டார். இதில் வலது பக்க வயிறு மற்றும் இடது பக்க மார்பில் குண்டுகள் பாய்ந்து அவர் பலத்த காயமடைந்தார்.

திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்ட இடம்

உடனடியாக போலீஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். பின்னர், திருவேங்கடத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. தற்போது, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மேலும், திருவேங்கடத்தின் குற்றப் பின்னணி குறித்த போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் பாம் சரவணன் சகோதரர் தென்னரசு கொலை வழக்கில் இவர் முதல் குற்றவாளி. 2014-ம் ஆண்டு குன்றத்தூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு இவர்மீது பதியப்பட்டிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் அவரை நோட்டமிட்டு, நேரடியாக கத்தியால் வெட்டிய குற்றவாளியும் இவர்தான். தற்போது, வழிப்பறி மற்றும் அடிதடி கொலை முயற்சி வழக்குகள் இவர்மீது நிலுவையில் இருக்கின்றன.