மாற்றுத்திறனாளி, சாதி சான்றிதழிகளில் மோசடி?! – தொடர் சர்ச்சையில் பெண் IAS அதிகாரி பூஜா

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேட்கர், விதிகளை மீறி தனது சொந்த காரில் சிவப்பு மற்றும் ஊதா கலர் சைரன் விளக்கு பொருத்தியதோடு, மகாராஷ்டிரா அரசு என்று போர்டு வைத்து சர்ச்சையை கிளப்பினார். அதோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை தானே எடுத்துக்கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தார். இது தவிர பெயர் பலகை, தனி ஊழியர், இண்டர்காம், தனி வீடு, கார் கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நெருக்கடி கொடுத்தார்.

இதையடுத்து அவர் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மாநில அரசுக்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து பூஜா வாசிம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். பூஜா நேற்றுத்தான் வாசிம் சென்று பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்தவுடன் அவர் மீதான புகார்கள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அரசு சட்டப்படி தான் எதுவும் பேசக்கூடாது என்று தெரிவித்துவிட்டார்.

இதே போன்று அகமத் நகரில் உள்ள பூஜாவின் இல்லத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை பூஜாவின் தாயார் விரட்டியடித்ததோடு அவர்களை மிரட்டவும் செய்தார் என்ற குற்|றச்சாட்டு எழுந்தது. பூஜா ஐ.ஏ.எஸ்.தேர்வில் 800வது இடம் வந்தார். இதனால் தான் சற்று பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என்று என்று கூறி அதற்கு சான்றிதழ் கொடுத்து சிறப்பு இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு பெற்றார் என்கிற குற்றச்சாட்டும் இப்போது எழுந்திருக்கிறது. அதோடு இதர பிற்படுத்தப்பட்டவர் பிரிவில் 8 லட்சத்திற்கு குறைவான வருமானம் உடைய கிரேமி லேயர் பிரிவை சேர்ந்தவர் என்று கூறி சாதிச்சான்று கொடுத்து அதிலும் இட ஒதுக்கீடு பெற்று இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் பூஜா குடும்பம் கோடீஸ்வரக்குடும்பம் ஆகும். அதை மறைத்து சான்றிதழ் வாங்கி கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

பூஜா மீதான புகார் குறித்து விசாரிக்க மத்திய அரசு தனிக்கமிட்டி அமைத்து இருக்கிறது. அதோடு மத்திய அரசு இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி அக்கமிட்டியிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தவிர மாநில அரசும் பூஜாவுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் கிரேமி லேயர் சான்றிதழ் கொடுக்கப்பட்டது குறித்து தனியாக விசாரணை நடத்த ஆரம்பித்து இருக்கிறது. பூஜா குறித்த விரிவான அறிக்கை அனுப்பும்படி முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி மகாராஷ்டிரா அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த அறிக்கை விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று மாநில தலைமை செயலாளர் சுஜாதா தெரிவித்துள்ளார். பூஜா மீதான புகார் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று மாநில அமைச்சர் அனில் சாவே தெரிவித்தார்.

பூஜா

புனே அலுவலகத்தில் பூஜா பணியாற்றியபோது அவரது தந்தை திலிப் தான் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தனது மகளுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்கும்படி கூறி நிர்ப்பந்தம் செய்தார். அதனால் திலிப் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொதுநிர்வாகத்துறை புனே மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கடிதம் எழுதி இருக்கிறது. திலிப் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அந்த வகையில் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தித்தான் பூஜாவிற்கு சலுகைகள் செய்து கொடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பூஜாவுக்கு பாத்ரூம் வசதியுடன் தனி அறை கொடுக்கவேண்டும் என்று கூறி நெருக்கடி கொடுத்துள்ளார். அதோடு பூஜா அறையில் சரியாக எலக்ட்ரிக் சாதனங்கள் பொருத்தப்படாமல் இருந்தது. உடனே திலிப் நேரில் வந்து வேலையை முடித்துவிட்டுத்தான் வீட்டுக்கு போகவேண்டும் என்று ஊழியர்களுக்கு நிர்ப்பந்தம் கொடுத்துள்ளார். ஆனால் பயிற்சிக்காலத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு இது போன்ற சலுகை எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88