வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்ப மறுத்த மனைவி; 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த தந்தை!

நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள தர்மபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு 6-ம் வகுப்பு படித்து வந்த ராபின் எபநேசர் என்ற மகனும், 4-ம் வகுப்பு படித்து வந்த காவியா என்ற மகளும் இருந்தனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ரமேஷின் மனைவி, வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

தற்கொலை செய்த ரமேஷ்

வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம் எனக் கூறியும் சென்றதால் இது தொடர்பாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் உமா, அங்கேயே தங்கிவிட்டார். இந்த நிலையில் தனது குழந்தைகளுடன் ரமேஷ், தனியாக வசித்து வந்துள்ளார். இருப்பினும் வேலையை விட்டுவிட்டு ஊருக்கு வந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதுதொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் போனில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ரமேஷ் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு குழந்தைகளுடன் தூங்கச் சென்ற ரமேஷின் வீட்டு கதவு காலையில் நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால், அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டின் கதவை தட்டிப் பார்த்துள்ளனர்.

ரமேஷின் வீடு

கதவு திறக்கப்படாததால், வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மனைவி ஊருக்குத் திரும்பி வர மறுத்ததால் மனமுடைந்த ரமேஷ், குழந்தைகளுக்கு வாழைப்பழத்தில் விஷத்தை வைத்துக் கொடுத்து, இரு குழந்தைகளும் மயங்கிய பின்னர், அவர்களை தூக்கில் தொங்க விட்டுவிட்டு கடைசியாக தானும் விஷம் கலந்த வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது.