திருச்சி: அரசியல் பிரமுகர் பிறந்தநாளுக்கு பரிசளிக்க வாள்; இளைஞரை மடக்கிய போலீஸ் – நடந்தது என்ன?

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக காவல்துறையினருக்கு புகார் சென்றது. இதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பொருட்டு, திருச்சி – திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, நத்தமாடிப்பட்டி கிராமத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பட்டறை சுரேஷ் என்கின்ற மைக்கேல் சுரேஷ் என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவெறும்பூர், அடைக்கல அன்னை நகர், பொன்மலைப்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளார். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிலர் பயங்கர ஆயுதங்களை வைத்துள்ளனர் என ரகசிய தகவல் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவித்துள்ள உதவி எண் மூலம் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் படி திருவெறும்பூர் உட்கோட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

குற்றவாளி

இந்த சூழலில், பட்டறை சுரேஷூக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அவரது ஆதரவாளரான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வந்த வாகனத்தினை வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது, அவரது வாகனத்தில் 79 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பித்தளை வாள் ஒன்று இருந்ததை கண்டு காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதனைக் கைப்பற்றிய போலீஸார் அதை வைத்திருந்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரது வாகனத்தில் வைத்திருந்த வாளை, பட்டரை சுரேஷின் பிறந்தநாளுக்கு பரிசு கொடுப்பதற்காக கொண்டு வந்திருந்த்து தெரியவந்தது. இதனால், சதீஷ்குமாரின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

கைது

இந்நிலையில், “திருச்சி மாவட்டத்தில் இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களையும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு ஆதரவாக அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களுக்கு போஸ்டர் அடிப்பவர்கள், கேக் வெட்டுபவர்கள், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுபவர்கள், லைக் போடுபவர்கள் ஆகியோரை திருச்சி மாவட்ட சமூக வலைதள கண்காணிப்பு குழு 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது. அப்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும்” என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.