`நீங்கள் பேசினால் கருத்துரிமை, நாங்கள் பேசினால் அவமதிப்பா?’- சாட்டை துரைமுருகன் கைதில் சீமான் கேள்வி

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரங்கள் ஜூலை 8-ம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், தனது கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உட்பட தி.மு.க தலைவர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தி.மு.க தரப்பிலிருந்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

துரைமுருகன்

இந்தப் புகாரில் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவந்த திருச்சி சைபர் க்ரைம் போலீஸார், சாட்டை துரைமுருகனைத் தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே இன்று கைதுசெய்தனர். இந்த நிலையில், தி.மு.க பேசினால் கருத்துரிமை நாங்கள் பேசினால் அவமதிப்பா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துகோன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “கொலைகாரர்கள், சாராய ஆலை அதிபர்கள் கையில் ஆட்சியைக் கொடுத்தால் கொலையை எப்படித் தடுப்பீர்கள், சாராயத்தை எப்படி ஒழிப்பீர்கள். அவர்கள்மீது பாயாத சட்டம், துரைமுருகனை மேடையில் பேசியதும் எதற்காக இந்த அரசு கைதுசெய்கிறது.

சீமான்

என்னைவிடவா துரைமுருகன் பேசிவிட்டார்… என்னைக் கைதுசெய்யுங்கள் பார்க்கலாம்… என்னைச் சுற்றியிருப்பவர்களைக் கைதுசெய்து எனக்கு நெருக்கடி கொடுப்பது. இது ஒரு ஆட்சிமுறை. எதற்காக இந்த கைது, `கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி, சதிகாரன் கருணாநிதி, சண்டாளன் கருணாநிதி’ என்பது பாடல். எழுதியவர், பாடியவரை விட்டுவிட்டு அதை எடுத்துப் பாடியவரைக் கைதுசெய்கிறீர்கள். நான் பாடுகிறேன் என்னைக் கைதுசெய்யுங்கள் பார்க்கலாம்.

ஸ்டாலின் – திமுக

அதிகாரம் வந்ததும் தன் அப்பாவுக்குப் புனிதர் பட்டம் கட்டுகிறார் (முதல்வர் ஸ்டாலின்). இங்கு அரசியல் வரலாற்றில் தீய ஆட்சியின் தொடக்கம் கருணாநிதி வந்தபிறகுதான் தொடங்கியது. பேரறிஞர் அண்ணா வரை அரசியல் வரலாற்றைப் பாருங்கள் எவ்வளவு நாகரிகம், கண்ணியம். அதற்குப் பிறகுதான் ஊழல், லஞ்சம், கொலை, கொலை, அவதூறு பேச்சுகள், சாராயம். முன்னாள் முதல்வரைப் பற்றி பேசவே கூடாதா… நீங்கள் பேசினால் கருத்துரிமை, நாங்கள் பேசினால் அவமதிப்பா… நாங்கள் பேசவே கூடாதா?” என்று கேள்வியெழுப்பினார்.