2.7 கிலோ தங்க நகை, ரூ.15 லட்சம் ரொக்கம் பறிமுதல்; திருச்சி ரயில் நிலையத்தில் இளைஞரை மடக்கிய RPF!

சென்னையிலிருந்து திருச்சிக்கு இன்று காலை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளை, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வைத்து சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த லட்சுமணன் (வயது: 24) என்ற பயணியின் உடமைகளை சோதனை செய்தபோது, அவரிடம் உரிய ஆவணங்களிலின்றி கொண்டுவரப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கமாக பணமும் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், இது குறித்து வணிக வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, வணிக வரித்துறை அதிகாரிகள் நகைகள் மற்றும் ரொக்கம் எவ்வளவு என்பதை கணக்கிட்டனர். அதில், 15 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. தங்க நகைகளை கணக்கிட்டதில் 2.75 கிலோ நகைகள் இருந்தது. அதன் மதிப்பு ரூ. 1,89,00,000 என கணக்கிடப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் பணம்

அதையடுத்து லட்சுமணனிடமிருந்து மொத்தமாக நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், அவரிடம் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லட்சுமணன் பரமக்குடியை சேர்ந்தவர் என்பதும், மதுரையில் உள்ள ஒரு நகை கடையில் பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதனால், லட்சுமணன் யாரிடமிருந்து நகைகள வாங்கி வந்தார், யாரிடம் கொடுக்க எடுத்துச் சென்றார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி இளைஞர் ஒருவர் நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை எடுத்து வந்த சம்பவம், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.