KPY Bala: உதவி கேட்ட மாற்றுத்திறனாளி பெண் – சில மணி நேரத்தில் இலவச இருசக்கர வாகனம் அளித்த பாலா!

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரேமா. ஈரோட்டில் உள்ள ஜவுளிக் கடையில் பணியாற்றி வருகிறார். போலியோவால் பாதிக்கப்பட்ட பிரேமா நாள்தோறும் வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்துக்கு 2 கி.மீ. தூரம் நடந்து சென்று அங்கிருந்து பேருந்து மூலம் வேலைக்குச் சென்று வருகிறார். 60 சதவிகிதம் மாற்றுத் திறனாளியான இவர், கடந்த 8 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் இலவச இருசக்கர வாகனம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். நான்கு முறை இவரது விண்ணப்பத்தை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை நிராகரித்துள்ளது.

நடிகர் பாலா, பிரேமா

இதனால் வேலைக்குச் சென்று வருவதில் பிரேமா மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வந்தார். இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்பதற்காக நடிகர் பாலா புதன்கிழமை வந்திருந்தார். `உணர்வுகள்’ அமைப்பு மூலம் நடிகர் பாலாவைச் சந்தித்த பிரேமா மாற்றுத் திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் தொடர்பாக உதவி கேட்டார்.

பாலாவின் உதவி

பிரேமா அளித்த மனுவைப் பெற்றுக் கொண்ட பாலா நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டார். நிகழ்ச்சி முடிவடைவதற்குள் உணர்வுகள் அறக்கட்டளையின் தலைவர் மக்கள் ராஜனிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்து மாற்றுத் திறனாளிக்கான வாகனத்தை வாங்கி பிரேமா வீட்டுக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தினார். அதன்படி, உணர்வுகள் அமைப்பினரும் ஏற்கெனவே பயன்படுத்தி விற்பனைக்கு வந்த ஓர் இருசக்கர வாகனத்தை வாங்கினர். நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு நேரடியாக பிரேமா வீட்டுக்குச் சென்ற நடிகர் பாலா, அந்த வாகனத்தை பிரேமாவிடம் வழங்கினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பிரேமா உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் கண்ணீருடன் பாலாவுக்கு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து பிரேமா கூறுகையில், “கடந்த 8 ஆண்டுகளாக இரு சக்கர வாகனம் வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் நலத் துறையிடம் பலமுறை மனு அளித்தும் பயனில்லை. போலியோ பாதிப்பாலும், 44 வயது காரணமாகவும் பேருந்தில் பயணம் செய்ய முடியவில்லை. அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலமாக வாகனம் கேட்டும் கிடைக்கவில்லை. இரட்டை பெண் குழந்தைகள் வைத்துக் கொண்டு வாழ்வாதாரத்தை நடத்துவதற்குச் சிரமத்தைச் சந்தித்து வந்தேன். நடிகர் பாலா செய்த உதவியை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. இதன் மூலம் எனக்குப் புதிய நம்பிக்கையும் பிறந்துள்ளது” என்றார்.

நடிகர் பாலா

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாலா, “அரசுக்கு அறிவுரை வழங்கும் தகுதி எனக்கு இல்லை. என்னிடம் பணம் இருந்ததால் இந்த உதவியைச் செய்துள்ளேன். பெரிய அளவில் நலத்திட்ட உதவிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறேன். ஈரோடு மலைவாழ் மக்களுக்கு முன்பு வழங்கிய இலவச ஆம்புலன்ஸ் சேவை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

மாற்றுத் திறனாளி பெண் உதவி கேட்ட சில மணி நேரத்தில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் பாலாவின் செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.