IND W: “சென்னை நாங்கள் எதிர்பார்க்காத ஆதரவைத் தந்தது!” – தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஷ்ரேயங்கா நன்றி

இந்திய வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட மகளிர் டி20 தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணியானது இந்திய அணியை வீழ்த்தியது. 2வது போட்டி மழை காரணமாகப் பாதியிலேயே கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

IND vs SA

இந்த தொடரைச் சமன் செய்ய வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடிய இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்திருக்கிறது. இந்நிலையில் இந்திய வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த பதிவில், “சென்னையில் நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான ரசிகர்கள் போட்டிகளைக் காண வந்தீர்கள். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய விஷயம்.

நான் பவுலிங் போட வரும்போதும், திரையில் தோன்றியபோதும் நீங்கள் செய்த ஆர்ப்பரிப்பு என்னை வெட்கம் கொள்ள வைத்தது. உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி. எங்களால் முடிந்ததைத் தொடர்ந்து உங்களுக்குக் கொடுப்போம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.