`லட்சங்களில் முதலீடு செய்தால் கோடியில் லாபம்!’ – இரிடிய மோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர்மீது வழக்கு

“இரிடியம் கலசத் தொழிலில் முதலீடு செய்தால் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்” என்று மதுரையைச் சேர்ந்தவரை மோசடி செய்த திருவள்ளூர் மாவட்ட தி.மு.க பிரமுகர் மீது மதுரை காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகமது ரபி

மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடை அருகே ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணியாற்றி வந்த கலைச்செல்வி சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகியுள்ளார்.

பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வம் கொண்டிருந்த தெய்வேந்திரனிடம் இரிடியம் கலசத் தொழிலில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தால், பல கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும், இதில் பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என கலைச்செல்வி ஆசை காட்டியுள்ளார்.

அதை ஆரம்பத்தில் நம்பாத தெய்வேந்திரனிடம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் முகமது ரபி என்பவரை போன் மூலம் அறிமுகப்படுத்தி பேச வைத்துள்ளார். அவர், தன்னை முன்னாள் அமைச்சர் ஆவடி நாசரின் உறவினர் என்று கூறியதால், அதில் நம்பிக்கையடைந்த தெய்வேந்திரன், அதன் பின்பு 2022-ல் மதுரைக்கு வந்திருந்த முகமது ரபியைச் சந்தித்து ரூ.3 லட்சத்தை கொடுத்துள்ளார். சில நாள்கள் கழித்து தெய்வேந்திரனை தொடர்பு கொண்ட முகமது ரபி, மேலும் பணம் கேட்க, ஆன்லைன் மூலம் ரூ.2 லட்சம் அனுப்பியுள்ளார்.

திமுக விளம்பரத்தில் முகமது ரபி

பின்னர், இரிடியம் கலச டீல் குறித்து மீட்டிங் நடக்கிறது எனக் கூறி சென்னையிலுள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, அங்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுள்ளனர்.

அந்த கூட்டத்திற்கு பல மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்தவர்ளுக்கு முன் பேசிய முகமது ரபி, இரண்டொரு நாள்களில் அனைவரும் மும்பைக்குச் சென்று லாப பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

அங்கு தெய்வேந்திரனிடம் பேசிய கலைச்செல்வி, “உங்களுக்கு வரவேண்டிய ரூ.20 கோடி தயாராக உள்ளது. கூடுதலாக ரூ.5 லட்சம் பணம் எடுத்து வாருங்கள்” என்று வலியுறுத்த, இதனை நம்பி தெய்வேந்திரன் உடனடியாக மேலும் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முகமது ரபி மற்றும் கலைச்செல்வியிடம் ரூ.18 லட்சம் கொடுத்த நிலையில், அவர்கள் சொன்னதுபோல் ரூ.20 கோடிக்கான இரிடிய கலசமோ, பணமோ கொடுக்கவில்லை.

இது குறித்து கலைச்செல்வியிடமும், முகமது ரபியிடம் தான் கொடுத்த ரூ.18 லட்சத்தை திருப்பி கேட்டபோது, இருவரும் தெய்வேந்திரனை மிரட்டியுள்ளனர். அதோடுதான் மதுரை தெற்குவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இரிடியம் மோசடி

இப்புகார் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், திருவள்ளூரைச் சேர்ந்த முகமது ரபி, மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி இருவர்மீதும் மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சதுரங்க வேட்டை திரைப்படம்போல் முகமது ரபி கும்பல் தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb