ஹோட்டல் உரிமையாளர் எனக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி; `சொகுசு வாழ்க்கை’ ஆசையால் சிக்கிய தம்பதி!

மதுரையைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது மகன் பரணி குமார். இவர் சேலத்தில் பிரபல ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது காதல் மனைவியான விஜய லாவண்யா சூப்பர்வைசராக இருந்தார். இவர்கள் இருவரும் தாங்கள் பணியாற்றி வந்த ஹோட்டலுக்கு உரிமையாளர்கள் எனக் கூறி, சாப்பிட வந்த தொழிலதிபர்களிடம் பழகி ஹோட்டலில் பாட்னராக சேர்த்துக் கொள்வதுடன், ஹோட்டலை விரிவுபடுத்தலாம் எனக் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பி அவர்களிடம் பல லட்சம் பணத்தை வாங்கியுள்ளனர், பலர்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் திடீரென ஹோட்டலுக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். பணம் கொடுத்தவர்கள் வந்து விசாரித்த போது இவர்கள் இருவரும் ஹோட்டலில் வேலை செய்தவர்கள் என்பதும் உரிமையாளர்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனால் அவர்களது வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றது தெரியவந்தது.

கைது

இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் சந்தோஷ் என்பவர் உட்பட 14 பேர் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தனர். இதில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். இதில் ஒருவரிடம் பணத்தை வாங்கி லாபத்தொகை என இன்னொருவரிடம் கூடுதலாக கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. பரணிகுமாரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்ததால் வீட்டிலிருந்து பொருள்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் நம்பரை வைத்து விசாரித்தனர். இதில், பரணிகுமார் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் ஆந்திரா சென்றனர். அங்கு கைக்குழந்தை மற்றும் காதல் மனைவியுடன் தனி வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பரணிகுமாரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

அவரது மனைவி மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணையில் விசாகப்பட்டணத்திலும் இதே போல மோசடி செய்த பரணிகுமார், அங்கிருந்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவானது தெரியவந்தது. மேலும், கணவன், மனைவி இருவரும் மிகுந்த ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கு பணம் தேவைப்பட்டதால் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.