Emergency:`இந்திரா எங்களைச் சிறையிலடைத்தார்; ஆனால் ஒருபோதும் துன்புறுத்தவில்லை’ – லாலு பிரசாத் யாதவ்

நாட்டில் நீட் தேர்வு முறைகேடுகள், தொடர் ரயில் விபத்து சம்பவங்கள், பற்றியெரிந்துகொண்டிருக்கும் மணிப்பூர் என முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வில்லாமல் இருக்கிறது. இப்படியிருக்க, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரில், இந்தப் பிரச்னைகளை விட்டுவிட்டு, `1975-ல் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி (Emrgency) நாட்டின் இருண்ட காலம், அரசியலமைப்பின் மீதான தாக்குதல்’ என, பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை விமர்சித்துவருகின்றனர்.

எமெர்ஜென்சி (Emrgency) காலம்

பதிலுக்கு காங்கிரஸ் தலைவர்களும், `50 வருட எமர்ஜென்சியைப் பேசுவதில் எந்த லாஜிக்கும் இல்லை, இன்றை பிரச்னைகளுக்கு என்ன தீர்வு’ என கேள்வியெழுப்பிவருகின்றனர். இந்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், எமர்ஜென்சியின்போது இந்திரா காந்தி தங்களை சிறையிலடைத்ததாகவும், ஆனால் துன்புறுத்தவில்லையெனவும் தற்போது தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக, `The Sangh Silence On 1975′ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் நளின் வர்மாவுடன் இணைந்து எழுதிய கட்டுரையை, தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் லாலு பிரசாத் யாதவ், “அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் திணிக்கப்பட்ட எமர்ஜென்சிக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்து செல்ல ஜெயபிரகாஷ் நாராயண் அமைத்த வழிநடத்தல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன். அந்த சமயத்தில், மிசா (MISA) சட்டத்தின்கீழ் 15 மாதங்களுக்கும் மேல் சிறையிலிருந்தேன்.

லாலு பிரசாத் யாதவ்

இன்று எமர்ஜென்சி பற்றி பேசும் பா.ஜ.க அமைச்சர்கள் பலரையும் எனக்கும் எனது சகாக்களுக்கும் தெரியாது. மோடி, ஜே.பி.நட்டா மற்றும் மற்ற அமைச்சர்கள் சிலரைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதுகூட இல்லை, இன்று இவர்கள் நமக்கு சுதந்திரத்தின் மதிப்பைப் பற்றி பாடம் எடுக்கிறார்கள். இந்திரா காந்தி எங்களில் பலரை சிறையில் அடைத்தார். ஆனால், அவர் ஒருபோதும் எங்களைத் துன்புறுத்தவில்லை.

மோடி, நட்டா

அப்போது அவரோ, அவரின் அமைச்சர்களோ யாரும் எங்களை `தேச விரோதிகள்’ அல்லது `தேசபக்தியற்றவர்கள்’ என்று அழைக்கவில்லை. நமது அரசியலமைப்பின் சிற்பியான பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுகளைத் தகர்க்க வன்முறையாளர்களுக்கு உதவவில்லை. 1975 நமது ஜனநாயகத்தின்மீது ஒரு களங்கம்தான், ஆனால் 2024-ல் எதிர்க்கட்சிகளை மதிக்காதவர்கள் யார் என்பதை மறந்து விடக்கூடாது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88