`விஷச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்…’ – கள ஆய்வறிக்கை வெளியிட்ட எவிடென்ஸ் கதிர்!

“தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி என்பது மாறி, இல்லம் தேடி சாராயம் என்ற நிலை வந்துவிட்டது..” என்று எவிடென்ஸ் கதிர் தமிழக அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

எவிடென்ஸ் கள ஆய்வு

நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்த கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து, மதுரையிலுள்ள எவிடன்ஸ் அமைப்பு கள ஆய்வு மேற்கொண்டது. அதன் ஆய்வறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய எவிடென்ஸ் செயல் இயக்குநர் கதிர், “கள்ளக்குறிச்சி விஷச் சாராயத்தால் 64-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் உயரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மரக்காணத்தில் 22 பேர் உயிரிழந்தபோது அங்கு சென்ற முதலமைச்சர், `கள்ளச்சாராயம் இனி ஒரு சொட்டுகூட விற்காது’ என கூறினார். ஆனால், இப்போது கள்ளச்சாராய விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதர்சேரி ஆகிய பகுதிகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டோம். கருணாபுரத்தில் காவல் நிலையம், நீதிமன்றம், கலெக்டர் ஆபிஸ் அருகிலேயே விஷச் சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் அரசு நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளதால், விஷச் சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.

எவிடென்ஸ் கதிர்

மருத்துவமனையில் ரெட் ஜோன் மற்றும் டார்க் ஜோன் வார்டுகளில் அதிக பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷச் சாராய விவகாரத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பை தாமதமாக அறிவித்து மக்களை திசை திருப்புகின்றனர்.

இதில் பட்டியலினத்தவர்கள் அதிகம் இறந்துள்ளனர். இறந்த பெண்கள் குறைந்த வயதுடையவர்களாக உள்ளனர். 54 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கோண்டோம். விஷச் சாராயத்தில் உயிரிழந்தவர்களில், 28 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். இதில் 11 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் மொத்த வியாபாரியிடமிருந்து சில்லறை வியாபாரிகளுக்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பாக்கெட் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் காவல்துறையினர் லஞ்சம் வாங்கி சென்றுள்ளனர். 18-ம் தேதியே கள்ளச்சாராயம் அருந்தி இருவர் இறந்துள்ளனர். ஆனால் அப்போது கள்ளச்சாராய மரணம் இல்லை என்று கலெக்டர் மறுத்துள்ளார். தலித் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளை குறிவைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களும் கள்ளச்சாராயம் குடித்து வருகின்றனர். 18-ம் தேதி விஷச் சாராயம் அருந்திய இளைஞர் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது சிகிச்சை அளிக்க முடியாது என கூறி அனுப்பியுள்ளனர். இல்லம் தேடி கல்வி என்பதை மறந்து இல்லம் தேடி சாராயம் என்பதுபோல் மாறிவிட்டது தமிழ்நாடு.

உளவுத்துறைக்கு கள்ளச்சாராய விற்பனை குறித்து தெரியாதா? கள்ளச்சாராயம் விற்பனை குறித்து புகார் அளித்தால், புகார்தாரரை வீடு தேடிவந்து புகார் மனுவை காண்பித்து மிரட்டிச் செல்லும் வகையில் முதலமைச்சரின் கீழுள்ள காவல்துறை செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசு கள்ளச்சாராய மரணத்தில் தோற்றுபோய்விட்டது, அரசின் இயலாமை, மரணத்திற்கு பொறுப்பு என்பதற்காகத்தான் 10 லட்சம் இழப்பீட்டுத் தொகை அளித்துள்ளனர்.

எவிடென்ஸ் கதிர்

கள்ளச்சாராய மரண விவகாரத்தில் எஸ்.சி-எஸ்.டி  பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்ய முடியாது என எஸ்.சி-எஸ்.டி மாநில ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சொட்டு சாராயம் விற்பனை ஆகாது என முதலமைச்சர் கூறிய நிலையில் எப்படி விற்பனை நடந்தது? எவிடென்ஸ் அமைப்பு கள ஆய்வுக்கு சென்றபோது மருத்துவமனை ஐ.சி.யூ வார்டுக்குள் அனுமதிக்கவில்லை. மரண விவரம் முழுமையாக தெரிந்துவிடும் என்பதால் அனுமதிக்கவில்லை, ஊடகத்தினரையும் மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை, எங்கள் குழுவை  காவல்துறையினர் பின் தொடர்ந்தனர்.

எங்களை தடுக்க இரண்டு எம்.எல்.ஏ-க்கள், ஒரு அமைச்சர் மூலம் உத்தரவு வந்துள்ளதாக சொல்லப்பட்டது. கள்ளச்சாராய மரண விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும், சிபிசிஐடி விசாரணை வெளிப்படையாக இருக்காது, காவல்துறையை காட்டிக்கொடுக்க மாட்டார்கள். சிபிஐ விசாரணையையும் நம்ப முடியாது.

ஆதி திராவிட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை விட 10 மடங்கு அதிகமாக மதுபான விற்பனை உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.45,862 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது.

கள்ளச்சாராய விவகாரத்தில் இறந்தவர்களுக்கு 25 லட்சம் வழங்க வேண்டும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை ஏன் துறைக்கு சம்பந்தம் இல்லாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்?

உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், ஒவ்வொரு ஊராட்சியையும் கள்ளச்சாராய விற்பனை தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும், விஷச் சாராய உயிரிழப்பு விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.

கள்ளச்சாராய விவகாரத்தில் இரண்டு எம்.எல்.ஏ- க்களின் தொடர்பு குறித்து கள ஆய்வின்போது பொதுமக்கள் தெரிவித்தார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒரு நபர் கமிஷன், சிபிசிஐடி விசாரணை, இழப்பீட்டுத் தொகை என கூறி ஏமாற்றிவிடுவார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த மரணம் நடந்துள்ளது. இதனை மனித உரிமை ஆணையம், நிச்சயமாக நேரில் விசாரணை நடத்த வேண்டும், தமிழகத்தின் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் முழுமையாக இல்லவே இல்லை என்ற நிலைதான் உள்ளது.

கள்ளக்குறிச்சி மரணங்கள் | Kallakurichi Illicit Liquor Deaths

தமிழகத்தில் ஆணவப் படுகொலை சட்டம் தேவையில்லை என்றார் முதலமைச்சர். ஆனால் மதுரையில் பட்டியலின பிரிவுகள் இடையே ஒரு இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும் என்றார். ஆனால் இப்போது வேண்டாம் என்கிறார். கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஏன் முதலமைச்சர் சந்திக்கவில்லை? அரசியலுக்காக டெல்லி செல்லும் முதலமைச்சர் சொந்த மாநில மக்களை சந்திக்காதது ஏன்? மத்திய அரசை சார்ந்தவர்களும் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை?

கள்ளக்குறிச்சி விவகாரம் – முதல்வர் ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மனித உரிமை ஆணையமும், குழந்தைகள் நல ஆணையமும் விசாரணை நடத்த வேண்டும். கள்ளச்சாராய விற்பனையிலும் அந்தந்த சமூகங்களைச் சேர்ந்த வியாபாரிகளிடம் அந்தந்த சமூக மக்கள் வாங்கி குடித்துள்ளனர். இதிலும் சாதிய கட்டுப்பாட்டோடு விற்பனை நடைபெற்றுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் காட்டில் விற்பனை நடந்தது. தி.மு.க ஆட்சியில் வீட்டிற்கே தேடிவந்து கள்ளச்சாரயம் விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb