மாங்கனி மாநகரில் தலைதூக்கும் போதை ஊசி கலாசாரம்; 24 மணி நேரத்தில் 7 பேர் கைது!

சேலம் மாநகரில் நாளுக்கு நாள் போதை ஊசி கலாசாரம் தீயாகப் பரவி வருகிறது. சேலம் குகை பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவர், சேலம் டவுன் காவல் நிலையத்தில் `அதிர்ச்சி’ புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அந்த இளைஞர், “சேலம் நான்கு ரோடு அருகில் வீரபாண்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சந்தைப்பேட்டையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் ஆகியோர் எனக்குப் பழக்கம் ஆனார்கள். நாங்கள் அவ்வப்போது சந்தித்துக் கொள்ளும்போது, அவர்கள் போதை மாத்திரையைத் தண்ணீரில் கலந்து ஊசி மூலம் கை நரம்பில் போட்டுக் கொள்வதைப் பார்த்துள்ளேன். அவர்கள் இதைப் பயன்படுத்தினால் நல்ல போதை வரும் என்று சொன்னதால், நானும் அவர்களிடம் அந்த போதை மாத்திரையை வாங்கி சில நேரங்களில் தண்ணீரில் கலந்து ஊசி மூலம் கை நரம்பில் நானே போட்டுக் கொள்வேன்.

கைது

எனக்குப் போதை மாத்திரைகளை 300 ரூபாய்க்கு வழங்குவார்கள். சத்திரம் சந்தைப்பேட்டை, சண்முகா ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் வழக்கமாக வைத்து என்னைப் போன்று வரக்கூடியவர்களுக்குப் போதை மாத்திரை கொடுப்பார்கள். போதை மாத்திரையைப் பயன்படுத்தி வந்ததால் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பெரும் சிரமத்துக்குள்ளாகியிருக்கிறேன். எனவே என்னைப்போலப் பலர் இது போன்ற தவறான வழிக்குச் செல்வதிலிருந்து தடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இளைஞரின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, சேலம் தெற்கு சரக காவல் துணை ஆணையர் மதிவாணனின் உத்தரவுக்கிணங்க போலீஸார் போதை மாத்திரைகளை விற்கும் கும்பல் குறித்த தேடுதலைத் தீவிரப்படுத்தி, இத்தகைய விற்பனையில் ஈடுபடுவோரைக் கைதுசெய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு 3 பேரும், இன்று காலை 4 பேரும் என இதுவரை மொத்தம் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து போதை ஊசி பழக்கத்தை ஒழிக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb